Sunday, September 5, 2010

கட்டப்பை வாழ்த்து



வலைப்பூ படி(றி)க்கும் போது,

கையில் காயம் படலாம்:

கழுத்தறு பட்டு,

இரத்தம் சொட்டலாமோ?

வசன-கவிதை-வார்த்தை விளையாட்டு

இனி இல்லை!

ஆயினும் அவ்வப்போது,

குறுங் கவிதை

ஒன்றிரண்டு கிளம்பி வரும்

குழந்தை நடைபோல்!! குற்றம் பொறுத்து,

குறுஞ் சிரிப்பு சிந்திடுவீர்!!!



“ஆஹா, தென்புறச் சுவரும்

மனைவியின் ஒப்பனை மேடையும்

கைகுலுக்கும் சந்திப்பில்,

ஒருக்களித்துச் சாய்ந்து

ஒய்யாராமாய் ஒருமாதிரி

நின்றிருந்தது அது

நிறைமாத கர்ப்பிணி போல்!!”

என்று சொன்னேன் அல்லவா? அது வேறொன்றுமில்லை, ஒரு கட்டப்பைதான்!!



கட்டப்பை பற்றி என்றேனும் நீங்கள் கருத்தோட்டம் செய்ததுண்டா?

இப்போதுசெய்யலாம். (அதாவது, மனைவியின் துணிமணிகளை மடித்து வைப்பது,

சமைக்கும் போது வெங்காயம் நறுக்கிக் கொடுப்பது போன்ற வேறு “தலை” போகிற வேலை எதுவும் இல்லாத பட்சத்தில்-மனைவியைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்/ல்வதாக, பாசக்கார, மீசைக்கார மைத்துனரிடம் போன சென்மங்களிலேயே சத்தியம் செய்து கொடுத்து ,அதை இனி வரும் சென்மங்களிலும் கடைபிடிக்கப் போகிறவர்கள் அல்லவா நீங்களும், நானும்! (பத்தினிவான்கள் நாம் இருப்பதாலன்றோ வருடம் தவறாமல் அக்னி நட்சத்திரம் வருகிறது !!)





இனி, விஷயத்திற்கு:



கட்டப்பை கடவுள் தந்த பை அல்ல! அது மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகளுள் ஒன்று! கையில் வைத்துக்கொண்டு அலையும் அலைபேசிக்கும், மடியில் வைத்துக் கொஞ்சிவிளையாடும் மடிக் கணிணிக்கும் சற்றும் குறைந்ததல்ல அதன் மகத்துவம்! க.பையைக் கண்டு பிடித்ததும், மனிதன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்:“இனி எல்லாம் சுகமே!!”



காற்று புகாத இடமில்லை!

கட்டப்பை போகாத பயணமில்லை!!

கட்டை வண்டிப் பயணமானாலும், கப்பல் பயணமானாலும், கார் பயணமானாலும், புகைவண்டிப்பயணமானாலும், பேருந்து பயணமானாலும், கட்டாயம் நம்முடன் கட்டப்பை இருக்கும் கர்ணனின் கவச குண்டலங்களை போல்!! இவ்வளவு ஏன், விமானப் பயணங்களிலும் கூட அது நம்மை விட்டுப் பிரிவதில்லை!!



புதிதாய் திருமணமான பெண் புகுந்த வீடு புறப்படும்போது, உற்ற தோழியாய் உடன் வருவது கட்டப்பை!



புகுந்த வீட்டிலிருந்து அவள் கண்ணைக் கசக்கிகொண்டு பிறந்த வீடு திரும்பும்போதும் அவள் கூட வருவது கட்டப்பை!! பெண் சொல்லும் கண்ணீர்க் கதைகள் கொஞ்சம் ; கட்டப்பை சொல்லாமல் சொல்லும் கதைகள் ஏராளம்!!



சூட்கேசில் பொருள்களை வைக்கிறோம்! கைப்பையில் பொருள்களை வைக்கிறோம்! ஆனால் கட்டப்பையில் யாரும் பொருள்களை வைப்பதில்லை:

அதில் பொருள்களை திணிக்கிறோம். அதுவும் எப்படி? வேறு எதிலும் வைக்க முடியாத பொருள்களை அல்லவா அதில் திணிக்கிறோம் !



பிரயாணம் கிளம்பும் போது, உங்களுடைய மடிப்புக் கலையாத சட்டைகள், கால் சராய்கள் ,உள்ளாடைகள், குழந்தைகளின் பொம்மைகள், பால் பவுடர் டப்பா, பீடிங் பாட்டில், பையனுடைய கிரிக்கெட் பந்து, பயணத்தின் போது உங்கள் மனைவி படிக்க பத்திரிக்கைகள், தண்ணீர் பாட்டில்கள், நொறுக்குத்தீணி சமாச்சாரங்கள், சாப்பாடு தூக்குகள் பழங்கள்- இப்படி பல பொருட்களை அதில் கொட்டுகிறோம்! இப்படி கர்மமே கண்ணாக இருக்கும்போது, சமையல் அறையிலிருந்து மன(ண)ம் கொண்ட/ற மகாராணியின் கட்டளை காற்றில் பறந்து வருகிறது :“ஏங்க! என் பாத்ரூம் சப்பலையும் ஒரு பேப்பரில் சுருட்டி அந்த கட்டப்பையில் போடுங்கள்!” கூடவே “இதெல்லாம் கூட சொல்லணும், என்ன ஜென்மமோ, எனக்கென்னு வந்துவாய்சிருக்கே, எல்லாம் எங்கப்பனைச் சொல்லணும்!! என்று தலையில் அடித்துக்கொள்வதும் கேட்கிறது! (தமிழ் மாட்ரிமோனி.காம் பெண்மணியைப் போல)!!



பாவம், உங்களால் என்ன செய்யமுடியும்- கட்டப்பையை கட்டிப்பிடிதுக் கொண்டு,‘படைத்தானே உன்னையும் என்னையும் படைத்தானே’ என்று மெளன ராகம் இசைத்து, இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்துவதைத் தவிர? சத்தம் போட்டு சலித்துக் கொள்ள முடியுமா ? - உங்கள் பயணச் சீட்டு எப்போதும் கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டதுதானே?



குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பும் உண்டோ ?

கட்டப்பை இல்லாத வீடும் உண்டோ?

குடிசை யானாலும், கோடீஸ்வரன் கூட கோபுரமானாலும்,

கடை நிலை ஊழியரானலும் கவர்னர் மாளிகையானாலும்

எல்லோர் வீடுகளிளும் கட்டப்பை கண்டிப்பாக இருக்கும்!

இந்த விஷயத்தில் க.பை ஒரு

சமதர்ம, ஜனநாயக, சமத்துவ, சோஸலிச,கம்யூனிச

இன்னும் மிச்சமீதி இருக்கும் சொச்ச இஸ வாதி!

மாறி மாறி எடுக்கும் தோற்றத்தில் அது ஒரு இரசவாதி!!



எனக்கொரு சந்தேகம் : இருபத்தி நான்கு மாடிகளுடன் வீடு கட்டும் அம்பானி வீட்டிலும், தங்கத்தால் இழைக்கப்பட்ட குளியலறை கொண்ட ஷாருக்கான் வீட்டிலும் இருக்கும் க.பையின் கட்டைகள் ஒரு வேளை தங்கத்தால் செய்யப்பட்டு, வைரத்தால் இழைக்கப்பட்டிருக்குமோ?



மனித ஜாதியில் இரண்டின்றி வேறில்லை என்றான் பாரதி.

கட்டப்பையிலும் இரண்டு ஜாதிதான்:

ஒன்று, மூங்கில் குச்சி உள்ளது;

இன்னொன்று பிளாஸ்டிக் குழல் கொண்டது.

தனக்கு சேவகனாக வந்த கண்ணணைப் பற்றி பாரதி பாடுகிறான்:

“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்!

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!!”

கட்டப்பையும் இடைச்சாதிதான்! ஆம்! மஞ்சள் பைக்கும் சாக்குப்பைக்கும்

இடைப்பட்ட ஜாதி அது! சாக்குப்பை போல அதில் பொருட்களை அடக்கலாம்!

மஞ்சள் பைபோல் அதை சுலபமாக எங்கும் எடுத்துப் போகலாம்!! சுருட்டியும்

எடுத்துப் போகலாம் வெகு ஸ்டைலாக! சுருட்டாமல் விரித்தும் எடுத்துப் போகலாம் கர்நாடகமாக!! வெயில் காலங்களில் தலைக்கு மேலே போட்டுக் கொள்ளலாம்! மழைக் காலங்களில் குடையாகவும் பயன்படுத்தலாம்!!

இவ்வளவு அற்புதமான கட்டப்பையை யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை! அது , இயற்கையின் கொடையான மழையைப் போல, காற்றைப் போல நமக்கு இலவசமாகக் கிடைகிறது-துணிக்கடைகளில்!! கட்டப்பையை இப்படி இலவசமாகக் கொடுக்கலாம் என்று கண்டுபிடித்த புண்ணியவான் யாரோ? அவர் யாராயிருந்தாலும் கதிரவன் உதிப்பது நிற்கும் வரை கடல் நீர் வற்றாதவரை, வாழ்க வாழ்க !!!



இலவசமாக கிடைக்கும் எதையும் நாம் மதிப்பதில்லை. கட்டப்பை மட்டும் விதிவிலக்கா என்ன? அதையும் ஒரு பொருளாக மதிக்காமல் அதற்குள் என்னென்ன பொருட்களைத் போட்டு வைக்கிறோம்! எப்படியெல்லாம் பயன் படுத்துகிறோம்!! நண்டு, சிண்டுகளின் நானாவிதப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள, பழங்காலத்து “அருங்காட்சியகப் பொருட்கள், மனைவியின் செளவுரி , கிழிந்த வேஷ்டி, சட்டை, இன்னபிற துணிமணிகள், பழைய புத்தகங்கள், புகைப்படங்கள், இப்படி அதில் போட்டு வைக்கப்படும் பொருட்கள்தான் எத்தனை எத்தனை!!



சலவைக்கு அழுக்குதுணிகள் எடுத்துச்செல்ல,சலவை செய்யப்பட்ட மனைவியின் பட்டுச் சேலைகள் எடுத்துவர, காய்கறி வாங்க, ஆட்டுக்கறி, மீன், கோழி (உயிருடனோ,உயிர் இல்லாமலோ) வாங்கி வர, பேருந்தில், புகை வண்டியில், இடம் பிடிக்க, இவற்றில் பயணம் செய்யும் போது செருப்புகள் இப்படி அப்படி நகராமல் இருக்க, சமயத்தில் தலைவைத்துப் படுக்க, இப்படி கட்டப்பையை நாம் பயன் படுத்தும் விதம் கணக்கிலடங்காது!



கட்டப்பையை நீங்கள் வீட்டிலும், பயணத்தின்போதும் எங்கும் வைக்க லாம், எப்படியும் வைக்கலாம்! அதை செங்குத்தாக வைக்கலாம்; படுக்க வைக்கலாம்; சாய்த்தும் வைக்கலாம்! எப்படி வைத்தாலும் அது தன் சம நிலையை இழப்பதில்லை! தப்பித்தவறி, அதிகமாக அது “ போட்டு ” க்கொண்டு மட்டையனாலும், அது வாந்தி எடுப்பதில்லை!



கட்டபையில் நீங்கள் பொருட்களை போட்டுக் கொண்டே போகலாம்!

ஒரு போதும், அது போதும் என்று சொல்வதில்லை! எல்லாம் போட்டபிறகு,

ஒரு சின்ன சணல் கயிற்றால் அதன் குச்சிகளைக் கட்டிவிட்டால், எதுவும் கீழே விழாது! எப்படி கட்டிய பின்னும் அதன் இண்டு இடுக்களில் இன்னும் பலப்பல“சங்கதிகளை”ச் சொருகலாம்!



ஆயிரக்கணக்கில் பணம் போட்டு வாங்கிய சூட்கேசில் இஷ்டத்துக்கு பொருட்களைத் திணித்து விட்டு, ஜிப் போடமுடியாமல், குட்டீஸ்களை அதன் மேல் உட்காரச்சொல்லி, பி.பி. எகிற, ஒருவாறு மூடி எடுத்துக்கொண்டு போனால், பேருந்திலோ புகை வண்டியிலோ ஏறும்போது, அது “ஆஹா”

என்று வாய் பிளந்து கொள்ளு(ல்லு)ம் அவஸ்தயை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்! அதை விடக் கொடுமை,அந்தச் சமயத்தில் மனைவி பார்க்கும் கொலைப் பார்வை!! ஐயோ....................



மனைவி திருவாரூர் தேர் போலஆடி,அசைந்து முன்னே செல்ல,

அவள் பின்னே கணவன் தோளில் ஒன்றும், கையில் ஒன்றுமாக கட்டப்பை

களைச் சுமந்து செல்லும் பெரும் பேறு பெற்ற அரிய பிறவியை நீங்கள் எப்போதேனும் பார்திருக்கிறீர்களா? இல்லையெனில் உங்கள் வீட்டுக்கண்ணாடி

முன்பு கொஞ்சம் போய் நில்லுங்கள்!!



வீட்டில் எத்தனை க.பைகள் இருந்தாலும், துணிக்கடையில் புதிய

கட்டப்பை தரும் போது வேண்டாம் என்று சொல்ல, எந்தப் பெண்மணிக்கும்

மனசு வருவதில்லை! வெறும் 258.50 ரூபாய்க்கு மூன்று ப்ளவுஸ் பிட்டு வாங்கி விட்டு ஒரு மணி நேரம் பெண்கள் சண்டை போடுவதும், அந்தச் சாக்கில் அவர்களிடம் கடைப் பையன்கள் கடலை போடுவதும் கொள்ளையழகு!!



கடவுள்களில் பிள்ளையார் மட்டும் விதம் விதமாக அவதாரம் எடுக்கிறார் – பாற்கடலில் படுத்திருக்கும் பிள்ளையார், படிக்கும் பிள்ளையார்,

குடைபிடித்த பிள்ளையார், நடனமாடும் பிள்ளையார், நடக்கும் பிள்ளையார்,

அரச இலைப் பிள்ளையார், ஹஸ்த முத்திரையில் பிள்ளையார்-இப்படி விதம் விதமாக!! யார் கண்டது இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் கட்டபையுடன் உங்கள் வீட்டுக் கதவை தட்டினாலும் தட்டலாம்! அவர் கட்டப்பையில் பரிசுகள் பல இருக்கலாம்-கிருஸ்துமஸ் தாத்தா பையைப்போல!!எதற்கும்பொறிகடலை,எள்உருண்டை,கொழக்கட்டைகளுடன்(இனிப்பு மற்றும் காரம்) தயாராக இருங்கள் அவரை வரவேற்க!!!



இவ்வளவு சிறப்பு வாய்ந்த கட்டப்பைக்கு, இதோ என் கவிதாஞ்சலி:

(எச்சரிக்கை:எதற்கும் முதலுதவி பெட்டி அருகில் இருக்கட்டும்! கவிதை படிகும்போது கழுத்தில் குருதி பெருக்கெடுக்கலாம்!!)



கட்டப்பைக்கு ஒரு கவிதாஞ்சலி



ஏர் பேக் அழகென்பர், சூட் கேஸ் அழகென்பர் ;

கட்டப்பைதம் அழகு காணாதவர்.



சுருட்டி வைத்திருந்தால் கட்டப்பையழகு; அதனினும் அழகு

அதில் கண்டபடி பொருள்கள் திணிக்கப் பெறின்.





எப்பொருள் யார்யார் கொடுத்தாலும் அப்பொருள்

அனைத்தும் அப்படியே கொள்ளும் கட்டபை!



கட்டப்பை இலார் எல்லாம் தமக்குரியர்-கட்டப்பை உடையாரெ

என்பும் உரியர் பிறர்க்கு!



கட்டப்பையை காணல் இன்பம்; அதற்கின்பம்

கண்டபடி அதில் பொருட்களைத் திணித்தல்!



அகர முதல எழுத்தெல்லாம் கட்டப்பை

முதற்றே மற்ற பை.



எல்லாப்பபையும் பையல்ல; காசினியில்

கட்டப் பையே பை!



எல்லா தையலரும்(டைலர்) தையரல்ல

கட்டப்பை தைப்பவரே தையலர்.



வையத்துள் மனைவி சொல்கேட்டு க.பை சுமப்பவரே

வானுயரும் தெய்வத்துள் வைக்கப்படும்!



கைப்பை யென்ப கட்டப் பையென்ப இவ்விரண்டும்

கணவரென வாழும் உயிர்க்கு.



கல்யாணம் நடத்த ஐயர் எடுத்து வருவதும் கட்டபை!

கருமாதி சடங்கு செய்ய அவர் எடுத்து வருவதும் கட்டபை!!

,

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

இது கவியரசிரின் கவலை!



கவியரசரே கவலையற்க! கடைசிவரை கட்டபை கூட வரும்!!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது அது! இறந்துபோன என் தந்தையின் அஸ்திக்கலசத்தை ஒரு கட்டப்பையில் வைத்துத்தான் பவானி ஆற்றில் கரைக்க எடுத்துப்போனோம்! அஸ்தியை கரைத்தோம்,ஆற்றில் கலசத்தை விட்டோம், கூடவே அதை எடுத்து வந்த கட்டப்பையையும்!

அன்புடன்,

லினிரா.