Saturday, December 4, 2010

தாத்தா சாமி!

                                             தாத்தா சாமி!



      கண நேரமும் வீணாக்காமல்
      காசு காசென்று
      காலமெல்லாம் அலைந்தேன்:
      காலத்தின் நுனியில்
      கற்பனையின் சுகமென்ன வென்று
      கற்கண்டுச்சொல் பேரன் சொன்னான்;
      சொன்னவன்“ரிஷி”யென்றால்
      நான் பெற்றுது ஞானாபோதேச மன்றோ!
     ஞாலத்தில் தகப்பன் சாமி மட்டுமா உண்டு?
      தாத்தா சாமியும் உண்டு தானே?


        


      விடுமுறைக்கு என் வீட்டிற்கு வந்திருந்த அந்த சுட்டிப்பையனின் கண்கள் ஒரு நாள் புத்தக அலமாரியில் எப்போதோ நான் வாங்கி வைத்திருந்த ஒரு பழைய தண்ணீர் வண்ணப்பெட்டியின் (water colour box) மேல் தாவின. வண்ணப்பெட்டியை கையில் பிடித்தபடி என் மனைவியிடம் ,“பாட்டி ,குடிக்க தண்ணீர்!” என்றான். கொஞ்சம் குடித்துவிட்டு தம்ளரும் கையுமாக என்னிடம் வந்து ஒரு பேப்பர் வாங்கிக் கொண்டு போனான். வேறு எதோ வேலையில் மூழ்கிப் போயிருந்த நான் அவனைக் கவனிக்க வில்லை! வேலை முடிந்ததும் அவனைப் பார்த்தேன். ஐயா வெகு மும்முரமாக நான் கொடுத்த வெள்ளைத்தாளில் எதையோ “கிறுக்கிக்” கொண்டிருந்தார். ஒரு பதினைந்து மணித்துளிகள் கழிந்திருக்கும், “தாத்தா,பாட்டி,அம்மா, அப்பா எல்லோரும் இங்கே வாங்க!“ என்று அழைத்தான்.கையிலிருந்த ஓவியத்தை எங்களிடம் காட்டி, “இது என்ன?” என்றான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பொடியன் இது,“ ரெயின்போவும் டைனாஸரும்!“ என்றான். அடுத்த கணம் அவன் கன்னத்தில் முத்த மழை பொழிந்தது!

கற்பனை அழகு!
குழந்தையின் கற்பனை கொள்ளை அழகு!!

     என் அருமைப் பேரன் ரிஷி இந்த ஓவியத்தை வரைந்த போது அவனுக்கு மூன்று வயது;இப்போது அவனுக்கு வயது ஏழு! எங்கள் வீட்டு வரவேற்பறைச் சுவற்றை இன்னமும் அலங்கரிதுக் கொண்டிருக்கிறது ரிஷியின் இந்த அற்புத ஓவியம்!

    உங்கள் வீட்டிலும் குட்டீஸ் இருக்கலாமே! அவர்கள் வரைந்த ஓவியங்களை உங்கள் வீட்டு வரவேற்பறைச் சுவற்றில் ஓட்டி வையுங்கள்!!


   வரவேற்பறைச் சுவர்களெல்லாம்
   வண்ணம் பூசிக்கொள்வது
   குட்டிப் பசங்களின்
   வண்ண ஓவியங்களைத்
   தாங்கிக் கொள்வதற்காகவன்றி
   வேறு எதற்காக?



  அன்புடனும் மகிழ்ச்சியுடனும்,

  லினிரா.