Saturday, July 23, 2016


தென்றல்
      தருணங்கள்                                                          
                                                         -லினிரா (17/07/2016)
9 பான் கேக், காரா பூந்தி மற்றும் குரங்கு சேட்
  தாத்தா மாலையில் வீடு திரும்பும்வரை நான் திண்ணையிலேயே காத்திருப்பேன் காரணம் அவர் கொண்டு வரும் தீனிகள். நான் விடுமுறைக்கு மட்டுமே தாத்தா வீட்டிற்குச் செல்வதால், நான் அவருக்குச் செல்லப்பிள்ளை. எனவே தீனி எனக்கு மட்டும் தான். சில சமயம் போனால் போகிறதென்று அதில் நான் துக்குனூண்டு சரோஜா அத்தைக்குத் தருவதுண்டு. எல்லோருக்கும் தீனி வாங்கித்தர தாத்தாவிற்கு கட்டுபடியும் ஆகாது.
  சில நாட்களில் தாத்தா காரபூந்தி என்று அப்போது பரவலாக அழைக்கப்பட்ட ‘மிக்ஸர்” வாங்கி வருவார். அது செய்த்தித் தாள் காகிதத்தில் கூம்பு வடிவில் சுற்றப்பட்ட பொட்டலத்தில் இருக்கும். எனக்கு அப்போது, காரா பூந்தியின் சுவையைவிட அது இருக்கும் கூம்பு வடிவ பொட்டலம் தான் பெரும் அதிசயம்! காரா பூந்தியை ஒரு கை பார்த்துவிட்டு, பொட்டலத்தை விரித்து, அதை மீண்டும் மீண்டும் கூம்பு வடிவமாக்க பலதடவை முயன்றிருக்கிறேன் பல நாட்காளாகியும் அந்த வித்தை எனக்குக் கை கூடவேயில்லை! பல வருடங்கள் கழித்து, திருமாண புதிதில் மனைவியுடன் பேருந்தில் க்டலை போட்டுகொண்டே, கடலை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பழைய ஞாபகத்தில் கூம்பு  “சுற்றும்” முயற்சியில் இறங்க, மணைவியானவர் என்னை, “என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்?” நான், என் பிரச்சனையைச் சொல்ல, அவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டே அந்த வித்தையைச் சொல்லிக் கொடுத்தார்.
 சில நாட்களில் தாத்தா ஒரு விதமான ‘பேன் கேக்’ வாங்கி வருவார்.  மேற் புறம் அகன்றும். நுனி சிறுத்தும் இருக்கும் அது, பட்டர் பேப்பரில் சுற்றியிருக்கும். சுமார் ஆறு அங்குல நீளம் இருக்கும் அதன் உட்புறம் பஞ்சுப் பொதி போல் மெது மெதுவென்றிருக்கும். மேற்புறம் கொஞ்சம் ரோஸ்ட் செய்யப்பட்டு மொறு மொறு வென்றிருக்கும். முதலிலெல்லாம்   ‘காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் பூந்த’, கணக்காக, கேக் சுற்றியிருக்கும் காகித்ததை அரக்க பரக்கப் பிரித்து, கேக்கை சிந்திச் சிதறிச் சாப்பிடுவேண். நான் கேக் சாப்பிடும் இலட்சணத்தைப் பார்த்த சரோஜா அத்தை ஒரு நாள் பட்டர் பேப்பரை மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து, கேக்கை சிந்தாமல் சிதறாமல் சாப்பிடும் வித்தையை சொல்லிக் கொடுத்தது.
  கேக், அந்தக் காலத்தில் ‘லோட்டா’ என்றழைக்கப்பட்ட சுமார் ஆறு அங்குல நீளமுள்ள டம்ளர் ஸைசுக்கு இருக்கும். இந்த டம்ளர்களை இப்போது பார்க்க முடியாது- இப்போதெல்லாம் மூன்று இஞ்ச் ஒல்லிப்பிச்சான் – ஸைஸ் ஜீரோ டம்ளர்கள்தான். சில வீடுகளுக்கு விருந்தினர் வந்தால் அதில் பாதியளவே காப்பி அல்லது டீ தருவார்கள். ஒரு முறை எனக்கும் ஒரு பெரும் செல்வந்தர் வீட்டில் இந்த ‘அரை டம்ளர் மரியாதை நடக்க, நான் காபி கொடுத்த நாரீமணியைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்து ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே சொன்னார்,  “அதிகக் காபி உடம்புக்கு ஆகாது!” நான் அவரை ‘அல்பமே’ என்பதுபோல் பார்க்க, அவரும் என்னை, ‘அட, அல்பமே!’ என்பது போல் பார்த்தார்.
  மாலை வேளைகளில் கொள்ளுப் பாட்டி மேலே சொன்ன பெரிய டம்ளர்களில் பால் கலக்காத பனங்கருப்பட்டிக் காப்பியை ஊற்றித் தரும். இதமான சூட்டில் இருக்கும் அதை உதட்டில் வைத்து ‘ஜூர் ஜூர்’ ரென்று ஓசை வர குடிப்பது அலாதி சுகம். அடுத்த காபி அடுத்த நாள் மாலைதான்.  பெட் காபி, பதினொரு மணி காபி. இரவு பால் போன்ற சங்கதியெல்லாம் பெரும் பணக்காரர்கள் வீடுகளில்தான். மற்றவர்களின் வீடுகளிளெல்லாம் காப்பிக்கு பனைவெல்லந்தான்!   “அஸ்கா” என்றழைக்கப்பட்ட வெள்ளை சக்கரையும் பணக்காரர்கள் வீட்டில்தான். வெள்ளைச் சர்க்கரை பணக்காரர்களின் ‘ஸ்டெடஸ் ஸிம்பல்”
  அப்பொழுது மண்ணெண்ணெய்க்குக் கடும் தட்டுப்பாடு இருந்தது. அது ரேஷன் கடைகள் இல்லாத காலம். தாத்தா பெட்ரோல் பங்கில் வேளை செய்ததால், அவர் அவ்வப்போது 16½ மண்ணெண்னெய் டின்னை—இது இப்போதுள்ள கடலை எண்ணெய் டின் போலிருக்கும்- வீட்டுக்குக் கொண்டு வருவார். மாலையில் வீட்டின் பின் புறமிருந்த தெருவில் நாங்கள் சீமெண்ணெய்க் கடையைத் திறப்போம்.  டின்னின் மேற்புறம் ஒரு மூலையில் ஒரு சிறிய தகடு வில்லை வைத்துச் ஈயத்தால் ‘சீல்’ செய்யப்பட்டிருக்கும். அதன் மேல் சிறிய தணல் துண்டுகளை வைத்தால் வில்லை விலகி விடும். இந்த வில்லையின் மேல் ஒரு குரங்கின் படம் போட்டிருக்கும். மண்ணெண்ணெய் டீலர் ஒரு சேட்டு! எனவே அவர் ‘குரங்கு சேட்டு’ என்றே வெகு அன்புடன் அழைக்கப்பட்டார். நானும் அத்தைப் பையன் பாரதியும் விற்பணையாளர்கள். தெரு ரெளடியான சித்தப்பாதான் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் போலீஸ்! மண்ணெண்ணெய் வாங்க பெரும்பாலும் பொடுசுகள்தான் வருவார்கள். எனவே சித்தப்பாவின் அதிகாரம் கையில் செங்கோலுடன் தூள் பறக்கும். அத்தைதான் காசாளர். மண்ணெண்ணையை டின்னிலிருந்து புனலில் சேந்தி, அளவிடும் கேன்களில் (250 மிலி, 500 மிலி, மற்றும் ஒரு லிட்.) அளந்து, வாடிக்கையாளர் கொண்டுவரும் பாட்டிலகளில் ஊற்ற வேண்டிய வேலையை நானும் பாரதியும் மாறி மாறிச் செய்வோம். மண்ணெண்ணெய் சேந்தும் புனல் ஒரு குழலுடன் இருக்கும். குழலின் மேல் நுனி அகன்று, ஒரு கிண்ணம் போல் இருக்கும். அதனுள் சிறிய தட்டுடன் கூடிய ஒரு ஒல்லியான உலோகக் குச்சி இருக்கும். குச்சியை கீழே செலுத்தி வேகமாக மேலே இழுத்தால் டின்னில் இருக்கும் மண்ணெண்ணெய் மேலெ பொங்கி வந்து, பாத்திரம் போன்றிருக்கும் அகன்ற பகுதியில் நிரம்பி, அதனுடன் இணைக்கப்பட்ட சிறு குழல் வழியாகப் பாய்ந்தோடி அதனடியில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலில் விழும்.  புனலை ‘ஆப்ரேட்’ செய்வதற்கு எங்களுக்குள் சமயத்தில் பெரும் போராட்டமே நடக்கும். மண்ணெண்ணெய் பொங்கி வரும் போது, நிறைய குமிழ்குளுடன் கொப்பளித்துக் கொண்டு வரும். அதைக்காணத்தான் அவ்வளவு அடிதடியும்! சேந்தும்போது, வேகத்திற்கேற்ப, ‘சொர் சொரெ’ வென்று சத்தம் கேட்கும்.   
 மண்ணெண்ணெய் சேந்துவது, படிப்பதற்கு சுலபமான காரியமாகத் தோன்றினாலும், உண்மையில் அதற்கு அசாத்தியத் திறமை வேண்டும். பல சமயங்களில், ஆர்வமிகுதியால், நான் அதிகவேகமாகச் சேந்தி, மண்ணெண்ணெய் புனல் முழுவதும் வழிந்து அல்லது வாடிக்கையாளரின் பாட்டில் நிறைந்து, வழிந்து தெருவில் கொட்டிவிடும். சில சமயம் மேலே  பொங்கி வரும் மண்ணெண்ணெய் என் முகத்தை அபிஷேகம் செய்யும். அபோது ஒரு அனிச்சை செயலாக என் நாக்கு மண்ணெண்ணையை நக்குவதும் உண்டு! அந்த மாதிரி சமயங்களில் அத்தையிடமிருந்து தவறாமல் என் தலையில் குட்டு விழும். சரியான அழுத்தத்துடனும்,சீரான வேகத்துடனும் குச்சியை மேழும், கீழும் செலுத்தி ஒரு சொட்டு எண்ணெய் வழியாமல் சேந்த, ஒரு கைதேர்ந்த வயலின் மேதையின் லாகவம் தேவை.  நான் எவ்வளவு லாவகமாகச் சேந்தினாலும், என்னால் எண்ணெய் சிந்தாமல் சேந்தவே முடிந்ததில்லை. சித்தப்பா இதில் கில்லாடி. எனக்கு அந்த லாகவம் கைவரப் பெறவேயில்லை! பல ஆண்டுகள் கழித்து, திருமாண பின்பு மண்ணெண்ணெய் அடுப்பிற்கு எண்ணெய் நிரப்பும் போதும் என் பிரச்சனை தீர்ந்த பாடில்லை! கடைசியில் சிறிய துருத்தியுடன் கூடிய பிளாஸ்டிக் புனல் வந்து, என் பிரச்சினையை ஒரு வழியாக தீர்த்து வைத்தது.
                                   ---தென்றல் இன்னும் முத்தமிடும்







Friday, July 8, 2016


கொசுக்கடி
   ---லினிரா (09/07/2016)

கை மேல் கொசு
ஓங்கி அடித்தேன்
உயிர் போகும் வலி
        ***
ஜன்னல் கம்பிகளில்
தொங்குகின்றன 
முதிர் கன்னியின் 
கிழிந்த ஆடைகளும் 
கிழியாத கனவுகளும்
        ***
அகலப்படுத்தப்பட்ட சாலையில் 
காரோட்ட                                                                          
வெகு சுகமாய்த்தானிருக்கிறது
வெட்டி சாய்க்கப்பட்டு
முண்டங்களாய் நிற்கும்
மரங்களைக் காணும் வரை
        ***
விடுமுறை முடிந்து
பறவைகள் கூடுகளுக்குப்
பறந்து விட்டன
வீடு சுத்தமாயிற்று
மனம் வெறுமையாயிற்று
                    ***
மணமக்கள் போல்
அலங்கரித்துக் கொண்டு சென்றனர்
ஆதார் புகைப்படமெடுக்க
         ***
முதுகின் பின்னால் நின்று கொண்டு
என் கண்களை மூடியது குழந்தை
மூடிய கண்களுக்குள் பேரொளி


Saturday, June 11, 2016



தென்றல்
      தருணங்கள்
                                                         -லினிரா (12/06/2016)
8.தேள் கண்டார் தேளே கண்டார்!  
                                   -
 அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தாயிற்று! நேற்று மாலை வாசல் தெளித்த கோடை மழை, இன்று சூட்டைக் கிளப்பிவிட்டது. வீட்டில் புழுக்கம் தாங்க முடியவில்லை.
  மின்சாரம் தான் இருப்பதை வெட்டி வெட்டி’ நிரூபித்ததால், கொஞ்சம் காற்றாடலாமென்று, வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வெளியில் அதைவிடக் கொடுமை! திரும்ப வீட்டிற்க்குள் செல்ல யத்தனிதேன். மனதில் ஏதோ உறுத்த, கால்கள் தயங்கின. தலையைப் திருப்பி, ‘என் உள்ளங்கவர் கள்வன்’ யாரென்று பார்த்தால், அது சுமார் ஐந்த அங்குல நீளமுள்ள ஏதொ ஒரு ஜந்து! கேட்டருகில் காம்பவுண்ட் சுவரில் ஒண்டிக் கொண்டு இருந்தது. உற்றுப் பார்த்தேன் - தேள் மாதிரி இருந்தது.
சற்றே குனிந்து பார்த்தேன் அது தன் மூன்றங்குலக் கொடுக்கை வளைத்து, ‘அற்பனே அருகில் வாடா’ என்றது. என் அறிவு உடனே அலாரம் அடிக்க, பின் பக்கம் ஓடி, ஒரு பெரும் கட்டையை எடுத்து வந்து ஒரே போடு!
 ஆனால் கால்களில் இன்னும் நடுக்கம் நின்ற பாடில்லை! பேசாமல்  வந்து படுக்கையில் விழுந்தேன்—தேள் ஒரு வேளை கடித்திருந்தால்……. மனம் தறிகெட்டு ஓடி----- நிஸீம் எஸெக்கியலின் ‘தேளின் இரவு’ (Night Of The Scorpion) கவிதையில் வந்து நின்றது!
 அப்போது எஸெக்கியலின் குடும்பம் ஒரு கிராமத்தில் வசித்து வந்தது. கவிஞர் சிறுவன். சொற்ப வீடுகளே இருந்த அந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வாழ்வாதாரம். மின்சாரம் இன்னும் தன் பார்வையைப் பதிக்காத கிராமம் அது. அந்தக் கிராமத்தில் எஸெக்கியலின் தந்தை மட்டுமே ஓரளவிற்குப் படித்தவர்.
 ஒரு நாள் மாலை மங்கிய நேரம்.எஸெக்கியலின் தாய் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த தானிய மூட்டைகளின் அருகே வருகிறார். அங்கே இடுக்கில் ஒண்டிக் கொண்டிருந்த தேளொன்று, பயந்து போய் அவர் இடது பெரு விரலில் கொட்டிவிடுகிறது. வலி பொறுக்க முடியாமல்  அந்தப் பெண்மனி, அப்படியே தரையில் படுத்துக் கொண்டு துடிக்கிறார்.
 சற்று நேரத்தில் செய்தி காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவி விடுகிறது. மக்கள் சாரி சாரியாக எஸெக்கியலின் வீடு நோக்கி வர ஆரம்பிக்கின்றனர். எல்லோருடைய மனதிலும் ஒரு பதைபதைப்பு- ஏதோ தங்களையே தேள் கொட்டி விட்டதைப் போல!
 எஸெக்கியலின் தாயார் நடுக் கூடத்தில் படுத்திருக்கிறார் வலியால் அவர் துடிப்பதைப் பார்த்து, ஆளாளுக்கு, ஒவ்வொரு விதமாக ஆறுதல் கூறுகின்றனர்’
  ஒருவர் சொல்கிறார்,“கொஞசம் பொறுத்துக்கம்மா. நீ செய்த தீ வினைப் பயன்களெள்லாம் அழிந்து விடும்!”
 இன்னொருவர் சொல்கிறார், “விஷம் உடம்பில் ஏற ஏற உன் பாவங்களெல்லாம் கழிந்து விடும்!”.
 ஒருவர் பாடம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
 “இந்தத் தேள்கடி, உன் உடலைப் புனிதமாக்கட்டும்!” இது ஒரு வயதான பெண்மணியின் ஆசிர்வாதம்!
 இன்னொமொருவர் சொல்கிறார், ”அந்தத் தேளை கண்டு பிடித்து அடித்துவிட்டால், உடனே விஷம் இறங்கி விடும்!”
 அதுவும் சரிதான் என்று சிலர் சொல்ல, தேளைத் தேடும் படலம் ஆரம்பமாகிறது. ஆனால், எவ்வளவு தேடியும் தேள் கிடைத்த பாடில்லை!
  இன்னொரு வயதான பெண்மணி, எஸெக்கியலின் தாயாரிடம் பேரன்புக் குரலில் கேட்கிறார், “தாயே ஏதாவது தெய்வக் குற்றம்?”
  இப்படி ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க, கொஞ்சம் படித்தவரான, அதானல் கொஞ்சம் பகுத்தறிவும் பெற்றவரான எஸெக்கியலின் தந்தை எங்கிருந்தோ ஒரு பாரபின் மெழுகுத் துண்டைக் கொண்டு வந்து, அதை தன் மனவியின், தேள் கடிபட்ட பெரு விரலில் அப்பி, மெழுகைப் பற்ற வைக்கிறார்- மெழுகு எரிந்து, விரல் சூடேறினால், விஷம் இறங்கிவிடும் என்று அவர் நம்புகிறார். சிறுவன் எஸெக்கியலுக்கு, அது தன் தாயாரின் விரலே பற்றி எரிவது போல் தோன்றுகிறது.
 வலி தாங்காமல் உடலை முறுக்கிக் கொண்டு அரற்றும் எஸெக்கியலின் அம்மாவைச் சுற்றி கிராமத்துப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு, “ஐயோ ஆணடவனே! இப்படி ஆகிவிட்டதே!” என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர், அறையில் இருக்கும் ஒவ்வொருவர் கையிலும் ஹரிக்கேன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி. பலவாறாகக் குனிந்திருக்கும் மனிதர்களின் உடல்கள், அவற்றின் வெளிச்சத்தில் மண் சுவர்களில் இராட்சத தேள்---நிழல்களாகப் (giant scorpion shadows) படிகின்றன.
 தேளின் விஷம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை! அது, அடுத்த நாள்- இருபது மணி நேரம் கழித்து, தானே இறங்கி விடுகிறது. விஷம் இறங்கிய பின் கண் விழித்த கவிஞரின் தாய் சொல்கிறாள்: ”நன்றி கடவுளே! தேள் என் குழந்தைகளை விட்டு விட்டு, என்னைக் கடித்ததே!”
 அது சரி,
 நான் அடித்தது தேளா அல்லது அதன் பங்காளியான நட்டுவாக்காலியா?   
 படத்தைப் பார்த்து யாராவது இந்த ’தருமி’யன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியுமா?

                                  


                                     ---தென்றல் தருணங்கள் தொடரும்










Saturday, June 4, 2016

தென்றல்
      தருணங்கள்

7. மைனரும், மோரிஸ் மைனரும் (05/06/2016)
 செட்டியாருக்கு திருப்பூரிலும் ஒரு ‘பங்க்’ இருந்தது என்று சொன்னேன் அல்லவா?  மாதம் ஒரு முறை தாத்தா, செட்டியாருடன் அங்கு சென்று அதன் கணக்குகளைத் தணிக்கை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் நானிருந்தால், என்னையும் தாத்தா தன்னுடன் அழைத்துச் செல்வார். நான், தாத்தா, செட்டியார் மூவரும் திருப்பூருக்கு அவருடைய ’மோரிஸ் மைனர்’ காரில் செல்வோம். நான் முன் சீட்டில் ஒரு மைனர் போல பந்தாவாக அமர்ந்து செல்ல, செட்டியாரும், தாத்தாவும் பின் சீட்டில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டு வருவார்கள்.
 செட்டியாருக்கு, குருணையை திரிகையில் போட்டு அரைத்தால் ‘கரகர’’வென்று ஒரு ஒசை வருமே அது போல் ‘கண’ கம்பீரக் குரல், ஆஜானுபாகுவான உருவம். நீள் சதுர முகம்.  முடியை “உயர்ந்த மனிதன்” சிவாஜியைப் போல படிய சீவி, அகன்ற நெற்றியில் வீபூதி பட்டைகளையிட்டு, நடுவில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருப்பார்.  நல்ல அகன்ற பெரிய விழிகள், எப்போதும் தீ கங்குகள் போல் ஜொலிக்கும். மூக்குக் கீழே நல்ல பருத்த மீசை! சமயத்தில் அதை நீவிக் கொண்டே செட்டியார் ‘ஹீங்கார” மிடுவார். சில சமயம் ‘என்னைப் பார்த்து, ‘ஏமிரா?’ என்பார் (செட்டியாருக்குத் தாய் மொழி தெலுங்கு; எனக்கும் அதுவே). எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விடும்.
 செட்டியாரின் கார் டிரைவர், செட்டியாருக்குச் சற்றும் சளைத்தவரில்லை! கருகருவென்றிருக்கும் தன் தலை முடியை எண்ணெய்விட்டு “நீலமலைத் திருடன்” ரஞ்சனைப் போல வாரியிருப்பார், இருவரும் ஜிப்பா அணிந்து, இடுப்பில் நாலு முழ வேட்டியை வெகு அலட்சியமாக ‘சுற்றி’ இருப்பார்கள்.  செட்டியார் எப்போதும் சந்தனக் கலர் ஜிப்பாவையே அணிவார். இவர் வெள்ளைக் கலர். செட்டியார் தோளில் நல்ல அகலமான அங்கவஸ்த்திரம் தொங்கும். இவர் தோலில் அது மிஸ்ஸிங்! இருவரும் ‘கட் ஷூ ‘ அணிந்திருப்பார்கள். இருவருக்கும் ஒரு முக்கியமான ‘சின்ன” வித்தியாசம்: செட்டியார் குரல் கண கம்பீரமாக ஒலிக்கும்; இவர் குரல் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட எலிக்குஞ்சு. ‘கத்து’வது போலிருக்கும்.
 அந்தக் காலத்தில் கார்களை சாவி போட்டுத் ‘திருகி’ யெல்லாம் சுலபமாக ’ஸ்டார்ட்’ செய்துவிட முடியாது.  பல சமயங்களில் சாவியைப் போட்டுத் திருகினால், ‘டுர்ர்க், டுர்ர்க்’ என்று இரண்டு மூன்று ஒலியை எழுப்பிவிட்டு, கார் ‘’ஆழ் துயிலில்” ஆழ்ந்துவிடும். இந்த மாதிரி சமயங்களில் வண்டியை உயிர்பிக்கவென்றே கார் கம்பெனியால் (இலவச இணப்பாக) கொடுக்கப்பட்ட, ஒரு கனாமான, நீளமான. வளைந்த கம்பியை (க்ராங்க் ஹேண்டில்’) காரின் முன்புறம், ’பானெட்’டுக் கீழே உள்ள துவாரத்தில் நுழைத்து, சுற்ற வேண்டும். சமயத்தில் எவ்வளவு சுற்றினாலும் வண்டி தன் துயிலிலிருந்து எழாது. அது ‘உனாக்காச்சு, எனாக்காச்சு’ என்று, வெயிலில் சுருண்டு படுத்திருக்கும் நாய் போல அசைவற்றிருக்கும். பார்பவர்களுக்கு அது காரா, கட்டையா என்ற ஐயம் வரும். அந்த மாதிரி சமயங்களில் நம் டிரைவர் அண்ணாச்சி, தரையில் மண்டியிட்டு, தன் நான்கு சாண் உடம்பை, எட்டாக வளைத்து, காரின் தூக்கம் களைக்க, பிரம்மப் பிரயத்தனம் செய்வார். அப்போது அவரைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வரும். நான் சிரிப்பது அவருக்கு எப்படியோ தெரிந்து விடும். தலையைத் திருப்பி, என்னைப் பார்த்து ஒரு முறை முறைப்பார். நான் என்ன லேசுப்பட்டவானா? நானும் திருப்பி முறைப்பேன். சமயங்களில், செட்டியாரிடம் போய் இன்னும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை’, என்று வத்தி வைத்து விடுவேன். அதைக் கேட்கும் செட்டியார், டிரைவரை சத்தம் போடுவார்.  மேலும் ஒரு பொடிப்பயலாகிய, நான் அவருக்குச் சமமாக, எதோ கார் என்னுடையதே என்பது போல் முன் சீட்டில் அமர்ந்து வருவது டிரைவருக்கு கொஞ்சமும் பிடிக்கவேயில்லை: நானும் லேசுப்பட்டவன் இல்லை! ‘ஆஃப்டர் ஆல், நீ டிரைவர்தானே!’ என்பதைப் போலத்தான் அவரை பார்ப்பேன். இதன் காரணமாக, எங்கள் இருவருக்குள்ளும் அன்றைய அமெரிக்கா-இரஷ்யா’ ‘கோல்டு வாரை’ப் போல ஒரு நிழல் பகைமை நிலவியது.

                                   ---தென்றல் முத்தங்கள் தொடரும்

Saturday, May 28, 2016

தென்றல் 
     தருணங்கள்...                                                       
6. கம்பெனி அய்யா!
                                                      ---லினிரா ( 29/05/2016)
 தாத்தா வீடு இருந்த வரிசையில், தாத்தா வீட்டிற்கு இருபுறமும் தறிகள் இருந்தன. தாத்தா வீட்டில் மட்டும் தறிகள் ‘மிஸ்ஸிங்’. தாத்தாவின் அப்பா கைத்தறி நெசவாளராக இருந்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் அந்தக் காலத்திலேயே  நான்கு எழுத்து’ படித்து உத்தியோகம் பார்த்தவர்கள். என் தாத்தாவின் தம்பி- என் சிறிய தாத்தா ரெவின்யு இன்ஸ்பெக்டராக இருந்தவர்.
 தாத்தா அன்று கோவையின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான மருதாசலம் செட்டியாரிடம் வேலை பார்த்து வந்தார். செட்டியார் கொஞ்ச காலம் சென்னையில் சினிமாத் துறையில் தன் திறமையைக் காட்டி விட்டு, பின்பு சினிமாவும் இவரிடம் தன் வேலையைக் காட்டிவிட்டதால், கோவையில் செட்டிலானவர். இன்றும் கோவை மேட்டுப்பாளையம்  ரோட்டிலிருக்கும் ‘ஷண்முகா தியேட்டர் செட்டியாருக்குச் சொந்தமானதுதான். அந்தக் காலத்திலேயே இது இரண்டு தளங்கள் கொண்டதாகக் கட்டுபட்டது.  தரை மட்டத்திற்குக் கீழே இருக்கும் கீழ் தளத்தில் நாடகங்கள் நடக்கும்; மேல் தளத்தில் சினிமா! செட்டியாருக்கு இதைத் தவிர கோவை பெரிய கடை வீதியில் கர்னாடிக் தியேட்டர் முன்புறம் ஒரு பெட்ரோல் பங்கும், திருப்பூரில் ஒரு பெட்ரோல் பங்கும் இருந்தன. இரண்டும் ’பர்மா‘ஷெல்’ கம்பெனியின் விற்பனை நிறுவனங்கள். தாத்தா செட்டியாரின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார்.
 தாத்தாவின் பங்காளிகலெல்லாம் காலை ஆறு மணிக்கே கோவணத்துடன் தறியில் உட்கார, கையில் அப்போது கோவையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ‘நவ இந்தியா’ செய்தித்தாளுடன் இவர் திண்ணையில் தரிசனம் தந்தருள்வார். ஏழுமணி சுமாருக்கு, ஒரு வெண்தாடி வேந்தர்---(இவர் பார்பதற்கு வினொபா பவே போலவே இருப்பார்). தலையில் குடுமியுடனும், வெற்று மார்பில் போர்த்திய துண்டுடனும் இருக்கும் இவரைப் பார்தாலே பயல்கள் எங்களுக்கு வெகு இளக்காரம் வெ. வேந்தர், தாத்தாவிடம்,‘நேடிகி ஏமி நியூஸ்?’ என்று தெலுங்கில் கேட்பார். உடனே தாத்தா அவரிடம் பேப்பரைக் கொடுத்துவிட்டு, குளிக்கக் கிளம்பி விடுவார். ‘தினமும் இப்படி ஓசிப் பேப்பர் படிக்க வந்து விடுகிறாரே இவர்’, என்று எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். (அந்தக் காலத்தில் இப்படி ஓசியில் பேப்பர் படிக்கவென்றே ஒரு கூட்டம் அலைந்தது)
 தாத்தா குளித்துவிட்டு, எட்டு மணியளவில் தன் ‘கம்பெனி’க்கு கிளம்பி விடுவார். வீட்டிலிருந்து என்.ஹெச். ரோடு வழியாக, ஐந்து முக்கு வந்து, கிழக்கே திரும்பி., ‘பிரசென்டேஷன் கான்வென்ட் எதிரில் சாலையைக் கடந்து, தன் அலுவலகத்திற்குச் செல்வார். மதிய சாப்பாட்டிற்கு ஒரு மணிக்கு வந்தாரென்றால், இரண்டு மணியளவில் மீண்டும் அலுவலகம் செல்வார். மாலை ஆறுமணியளவில் வீடு திரும்புவார்.
 தாத்தாவின் மார்பின் குறுக்கே முப்புரி நூல் ( பூணூல்) தொங்கும் அதில் அவருடைய பரம்பரைச் சொத்தான, 5 அடி ஈட்டி பீரோவின் சாவி தொங்கும். தாத்தா துவைத்த, சுத்தமான வெள்ளாடைகளையே அணிவார். மேலே ஜிப்பா. இடுப்பில் நாலு முழ வேட்டி. இடது தோளில் மடிப்புக் கலையாத அங்க வஸ்திரம். வலது கையில் குடையுடன், சரக் சரக்கென்று செருப்பு ஒலி கட்டியம் கூற, அவர் அலுவலகம் செல்வதை சிறுவர்கள் நாங்கள் பிரமிப்புடன் பார்ப்போம். தாத்தாவிற்கு, செட்டியாரின் சகவாசத்தால் ஆங்கிலமும் ஒரளவிற்குத் தெரியும். பர்மாஷெல் கம்பெனி பெட்ரோல் பங்கில் அவர் வேலை செய்ததால், தாத்தாவை அவர் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘கம்பெனி ஐயா’ என்றே அழைத்தார்கள். எங்களுக்கும் அவர் கம்பெனி ஐயாதான் – வளர்ந்து, நான் கல்லூரி செல்லும் போதுதான் அவரின் பெயர், வேலாசாமி செட்டியார் என்று எனக்குத் தெரியும். நெசாவாளியின் மகன் நெசவாளிதான் என்று இருந்த காலத்தில். என் கொள்ளுத் தாத்தா தன் இரண்டு மகன்களையும் நாலெழுத்து படிக்க வைத்து, அலுவலக வேலைக்கு அனுப்பினார். என் தாத்தா, தன் இரு மகன்களில் ஒருவரை (அடியேனின் தந்தை) உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இன்னொருவரை சிவில் இன்ஞீனியராகவும் ஆக்கினார். என் சித்தப்பா, பரம்பிக்குளம்--- ஆழியார் அணை கட்டியதில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். என் தந்தை என்னை பி.எஸ்சி, எம், ஏ என்று ஒரு சில ‘எழுத்துக்கள்’ படிக்க வைத்ததால். இதோ நானும் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

                                      ---தென்றல் முத்தங்கள் தொடரும்

Tuesday, May 24, 2016

5. மல்லிகை மங்கைகள்
                                            --லினிரா( 24/06/2016)
 தாத்தா வீட்டு சந்து, பெயருக்குத்தான் சந்து! இரண்டு அடிக்கு இரண்டடி சிமெண்டு கற்கள் பாவப்பட்டு, அது மிக சுத்தமாக இருக்கும். காலையும், மாலையும் அழகான கோலங்கள் அலங்கரிக்கும். தாத்தா வீட்டின் எதிர் வரிசையில், 3 அங்குல ஆழமும், 3 அங்குல அகலமும் கொண்ட சிறிய சாக்கடை நெடுக ஓடும். ஒரு இடத்தில்கூட சாக்கடை நீர் தேங்காது. தாத்தா வீட்டு வரிசையிலிருந்த வீடுகளுக்குச் சாக்கடை, புழக்கடைப் பக்கம் இருந்தது. தாத்தாவின் பங்காளிகள் அடுத்தடுத்துக் குடியிருந்தனர். தாத்தா வீட்டைத் தவிர மற்ற வீடுகளில்லெல்லாம் குறைந்த பட்சம் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தறிகள், ‘படுகு’ எனப்படும் நூள் சுற்றும் 10 அடி விட்டமுள்ள பெரும் இராட்டினம் ஒன்றும், 4 அடி விட்டமுள்ள இராட்டினம் ஒன்றும், 1 அடி விட்டமுள்ள இராட்டினம் இரண்டு, மூன்றும் இருக்கும். இவற்றில் சிறிய இராட்டினத்தை மட்டும் நெசவாளரின் மனைவி சுற்றுவார். மற்றவறைச் ‘சுற்ற’ கூலிக்கு பெண்கள் இருப்பார்கள். இப்படி ஒரே வீட்டில் நெசவாளி, தொழிலாளியாக இருக்க, அவர் மனைவி, இரண்டு, மூன்று பெண்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக இருக்கும் ஒருவிதக் ‘கலப்புப்’ பொருளாதாரம் அங்கு நிலவியது. காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நெசாவாளர்களின் வீட்டுத் தறிகளின் ’டக்கு, டடக்கு’ இன்னிசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாலை 5 மணி சுமாருக்கு, நெசவாளிகளின் மனைவிகள் தங்கள் வீட்டுக்காரருக்கு பனங்கருப்பட்டி ’தண்ணி’ கொடுத்துவிட்டு, தாங்களும் ஒரு வாய் குடித்துவிட்டு, தலைவாரிப் பொட்டிட்டு, பூச்சூடி தங்கள், தங்கள் வீட்டுத் திண்ணைகளில் அமர்வார்கள். சிறிது நேரத்தில், கல கல வென்ற சிரிப்புடன் அவர்கள் கச்சேரி களை கட்டும். தலைவாருதல் என்றால் சும்மா ஒப்புக்கு முடியை சீப்பால் ’வரக் வரகெ’ன்று வாரி கோடாலி முடிச்சுப்போடும் சாமாச்சாரமெல்லாம் இல்லை. நன்றாக சுத்தாமான(!) தேங்காய் எண்ணையை முடிக்குத் தடவி, சீப்பால் சிக்கெடுத்து (சிக்கெடுக்கும் அளவிற்கு பெண்களுக்கு அன்று முடியிருந்தது; சிக்கெடுக்க பெண்களுக்குப் பொறுமையும் இருந்தது ) நன்றாக அழுந்த வாரி சவுரி வைத்து மூன்று ‘கால்’ சடை பின்னிக் கொள்வார்கள். 40 + களில் இருக்கும் நாரிமணிகள், ‘பிச்சாடோ’ என்ற துணி வளையத்திற்குள் தங்கள் முடியைச் சுருட்டி ஒரு விதமான கொண்டையைப் போட்டு அதைச் சுற்றி மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொள்வார்கள். 60, 70-களில் வந்த திரைப்படத்தின் கதா நாயகிகளுக்கு இந்த ‘பிச்சாடோ’ கொண்டைதான் ‘ஸ்டாண்டாட்’ தலை அலங்காரம். நான் அப்படிப் பார்த்த முதல் கதா நாயகி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தேவிகா! அந்தப் படத்தில் அந்தக் கொண்டையுடன் தேவிகா பாடும் ‘சொன்னதும் நீ தானா, சொல், சொல் என்னுயிரே’ வை இன்னும் என் நெஞ்சம் மறக்கவில்லை. ’குடிப்பது கஞ்சியே ஆனாலும், கட்டும் கந்தையைக் கசக்கிக் கட்டுவதும், நாள் தவறாமல் தலையில் மல்லிகைச் சரம் சூடுவதும்’ இப்பெண்களின் வாழ்க்கை நெறி! நெசவாளர்களின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போனாலும், வழிவழியாக வந்த, அவர்கள் பெண்கள் மாலையில் மல்லிகைப் பூ சூடிக்கொள்ளும் பழக்கம் மட்டும் இன்னும் மறையவே இல்லை. அன்று போல் இப்போதும் பல வீடுகளில் கடைகளுக்கு பூச்சரங்கள் கட்டிக் கொடுப்பது ஒரு குடிசைத் தொழிலாகவே இருக்கிறது. பூக்களையும், பூச்சரங்களையும் விற்பதற்காகவே இப்பகுதியில் ஒரு பெரிய மார்க்கெட்டே இயங்குகிறது. அதற்கு ‘பூ மார்கெட்’ என்றே பெயர். இப்படி தமிழ் நாட்டில் வேறெங்காவது இருக்கிறதா?
 இன்றைக்கும் தியாகராயப் புது வீதி 1, 2, 3, தேவாங்கர் பேட்டை, பூ மார்க்கெட் ஏரியாக்களில் மாலை நீங்கள் உலா வந்தீர்களென்றால் மல்லிகை மணக்கும் மங்கையரைப் பார்க்கலாம். ஆனால், இப்போது வடக்கும் தெற்கும் கலந்து விட்டதால், இந்தப் பகுதியில் குஜராத்திக் குடும்பங்கள் பெருகிவிட்டன. வீயாபாரம் செய்ய வந்த சேட்டுகள், பல நெசவாளர்களின் வீடுகளை, வாங்கி, அவற்றை இடித்து விட்டு, பெரும் கோட்டைகளைக் கட்டிவிட்டனர். நெசவாளர்களின் தறிகளும், திண்ணைகளும், கோவணங்களும் காணாமல் போய்விட்டன. , குஜராத்திப் பெண்களுக்கு, மல்லிகைப் பூச்சரங்கள் சூடிக்கொள்வதிலும் அவ்வளவாக விருப்பமில்லை போலும்! இன்று இந்தப் பகுதிகளில் நடந்து போனால், நெடு நெடு வென வளர்ந்த, நல்ல சிவப்பான, தலைக்கு பிறைச் சந்திர முக்காடிட்ட, வெடு வெடுவென வேகமாக நடந்து போகும் சேட்டுப் பெண்களைப் பார்க்கலாம். சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் அவர்கள் வேக, வேகமாக நடப்பது கண்கொள்ளாக் காட்சி! எனக்கொரு சந்தேகம்: இந்தப் பெண்கள் ’விசுக் விசுக்’ கென்று எவ்வளவு வேகமாக நடந்தாலும் இவர்கள் தலை மேல் போட்டிருக்கும் மூன்றாம் பிறை முக்காடு கொஞ்சம் கூட விலகுவதில்லையே, அது எப்படி?   
                                       ---தென்றல் இன்னும் முத்தமிடும்    





Friday, May 13, 2016

4. வெட்டும் புலி
                                                        ---லினிரா (14/05/2016)
  எங்கள் ‘பனாமா லாக்கர்களான ’பரண் லாக்கர்களில்‘ வெகு இரகசியமாக சேமித்து வைக்கப்படும் மிக முக்கியமான அசையும் சொத்து, தீப்பெட்டி மற்றும் சிகரெட் பெட்டி அட்டைகள். அப்போதெல்லாம் இவற்றில் பல் வேறு ’பிராண்டு’கள் இருந்தன. தீப்பெட்டிகளில் அந்த அந்தக் கம்பெனிகளின் லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். மஞ்சள் நிற பின் புலத்தில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் இரட்டைக் குருவி, சங்குவின் படம், இப்படிப் பல வகையான லேபிள்கள் தீப்பெட்டிகளின் மேல் ஒட்டப் பட்டிருக்கும். தீப்பெட்டிகள் மிக மெல்லிய ‘மரத் தகடு’களால் ஆனவை. இவற்றில் மிக விசேஷமானது ‘வெட்டும் புலி’ தீப்பெட்டிகள். அப்போது மிகப் பிரபலமான இந்தத் தீப்பெட்டிகளின் லேபிள் பார்க்க மிக அழகாக இருக்கும். லேபிளைச் சுற்றி, பூ கட்டும் நூல் போல் வெள்ளை நிற ‘பார்டர்’  ‘ஓடும்’. அங்கங்கே, ஒன்றிரண்டு மேகங்கள் ‘நின்று’ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நீல வானப் பின்னணியில், ஒரு வயல் வெளி. வயல் வெளியெங்கும் அறுவடைக்குத் தயாராயிருக்கும் பொன்மணிக் கதிர்கள்! வயலின் ஒரு ஓரத்தில் ஒரு மரம்- மரத்தின் அந்தப் பக்கம் சீறிப்பாயும் புலி. இந்தப் பக்கம் ஒரே வெட்டாக அதை வெட்டிச் சாய்க்க வலது கையில் அரிவாளோடு, ஆஜானுபாகுவான ஒரு ஆள். அவரின் வலது கையில் அரிவாளிருக்க, இடது கை இடுப்பில் பதிந்திருக்கும். தலையில் சுருட்டிக் கட்டிய தலைப்பாகையுடனும், திறந்த மார்புடனும், இடுப்பில் முழங்கால் வரை மடித்துக் கட்டிய வேட்டியுடனும் அவர் காட்சியளிப்பார். அந்த வேட்டியின் ஒரு முனையை முன்புறம் கால்களின் நடுவே விட்டு, பின்புறம் இழுத்து, இடுப்பில் சொருகி, தார்பாய்ச்சிக் கட்டியிருப்பார். கால்களை அகற்றி வைத்து, வயல் நடுவே ஆழமாக மண்ணில் ஊன்றி நின்று கொண்டிருக்கும் அவர். கால்களின் ஆடு சதையும், நரம்புகள் புடைத்திருக்கும் கரங்களின் உறுதியும், கட்டபொம்மன் மீசையும் அவர் வீரத்தைப் பறை சாற்றும். அந்தக் கண்களில் மின்னும் ஆவேசம், தீ போன்று சுடும்.! (பல இரவுகளில் இந்தப் படத்தை நினைத்து பாதித் தூக்கத்தில் நான் ‘புலி, புலி’ என்று அலறியிருக்கிறேன். அப்போதெல்லாம் சரோஜா அத்தை எழுப்பி, தண்ணீர் குடிக்க வைத்து, நெற்றியில் திரு நீறு பூசி முதுகில் தட்டிக் கொடுத்து, மீண்டும் தூங்க வைக்கும்)
 லேபிளில் இருக்கும் மரத்தின் இலைகள் அசையப் போவதில்லை:
 கதிர்மணிகள் அறுவடை செய்யப்படப் போவதுமில்லை:
 புலியும் மனிதன் மேல் பாயப்போவதில்லை;
 மனிதன் அதை வெட்டப் போவதுமில்லை!
 காலப் பெருவெளியில் உறையவைக்கப்பட்ட (‘ஃப்ரீஸான’) இந்தக் காட்சி யேசுவின் ’கடைசி விருந்துக்கும்’, மோனலிஸாவின் புன்னகைக்கும் சற்றும் சளைத்ததல்ல!!  
 கேவலம், ஒரு தீப்பெட்டி லேபிள்! அதில் அச்சிட இப்படி ஒரு கற்பனையை இவ்வளவு அழகாக தீட்டியவன் யார்? அவன் எவ்வளவு பெரிய கலைஞன்! ஒரு சிறிய தீப்பெட்டி லேபிளில் ஒரு இனத்தின் மாண்பையும், வீரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லி விட்ட அந்தக் கலைஞன் டா வின்ஸிக்கும், மைக்கேல் ஏஞ்சலோவிற்கும் சவால் விடுகிறான்! எல்லாவற்றையும் விட, அதைப் பெற்று, அச்சிட்டு தன் தீப்பெட்டிகளில் பயன்படுத்திய அந்த தீப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளரின் இரசிக்கும் மாண்பை என்னவென்று சொல்ல?. நினைக்க நினைக்க மனம் பொங்குகிறது!
 உரிமையாளர் ஓவியனிடம் தனக்கு, ‘இப்படி ஒரு ஓவியம்’ வேண்டுமெனெக் கேட்டாரா?
 அல்லது,
 அவர் தன் தீப்பெட்டி லேபிளுக்கு படமொன்று கேட்க, ஓவியன் இப்படி ஒரு காவியத்தை வடித்தானா? அப்படியெனில், தன் ஓவியத்தை தீப்பெட்டி தாயாரிப்பாளர் ஏற்றுக் கொள்வார் என்று அவன் எவ்வளவு ஆழமாக நம்பியிருக்க வேண்ட்டும்!! எந்த அடிப்படையில் அவ்வளவு ஆழமாக நம்பினான்? அடிப்படையில்லாத நம்பிக்கைகள்தான் ஆழமான நம்பிக்கைகளோ? 
 ஒரு வேளை, உரிமையாளரே ஓவியராகவும் இருந்திருக்கக் கூடுமோ?
                                     ---தென்றல் இன்னும் முத்தமிடும்



Saturday, May 7, 2016

3. பரணும் பனாமாவும்!
                                            ---லினிரா (07-05-2016)                                                
  அப்போதெல்லாம் ‘எவர் சில்வர்’ பாத்திரங்கள் கிடையாது. அவை பெரும் செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே இருக்கும். எல்லோருடைய வீட்டிலும் ‘ஏழைகளின் வெள்ளி’யாலான அலுமினியப் பாத்திரங்கள்தான்! தாத்தா வீட்டிலும் அப்படித்தான். தாத்தா சாப்பிடும் தட்டு மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. அதன் உட்புறம் வெள்ளை வெளேரென்று ஒரு விதக் கலவை பூசப்பட்டு வழு வழுவென்றிருக்கும். வெளிப்புறம் அதே கலவை, பாசிப் பச்சை நிறத்தில். விளிம்புகள் சுமார் மூன்று அங்குலத்திற்கு வளைக்கப்பட்டு, மடக்கிவிடப் பட்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு பெரிய கிண்ணம் போன்றிருக்கும் இவை மிக அழகானவை. அந்தத் தட்டில் சாப்பிட, தாத்தா இல்லாத மதிய வேளைகளில் எங்களுக்குள் பெரிய போராட்டமே நடக்கும். சரோஜா அத்தை எங்கள் தலைகளில் குட்டி, அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். சமயத்தில் அத்தை எங்கள் கண்களில் படாமல் அதை ஒளித்து வைத்துவிட்டு, பின் தன் உணவை அதில் போட்டுச் சாப்பிடும். வெளிப்புறம் பச்சை அல்லது நீல நிறப் பூச்சும் கொண்ட, உட் புறம் வெண்மையாகப் பீங்கான் போலிருக்கும், விரல் வைத்தால் வழுக்கிக் கொண்டு போகும் இந்த மாதிரி வட்டில்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சாப்பிட்டிருக்கிறீர்களா?
 தாத்தா வீட்டுப் படுக்கையறையின் மேல் ஆறடி உயரத்தில், சன்னமான மூங்கில்களால் வேயப்பட்ட ’அட்டாலி’ என்றழைக்கப்பட்ட பரண் இருந்தது. இந்த அமைப்பின் காரணமாக, தாத்தா வீடு கோடையில் ‘குளு, குளு’ வென்றும், குளிர் காலங்களில் ’வெது வெதுப்’ பாகவும் இருக்கும். விடுமுறை நாட்களில், நடு அத்தை பையன் பாரதியும், சித்தப்பா இராஜேந்திரனும். (சித்தப்பா என்னைவிட இரண்டு வயது சிறியவன்! )  பரணுக்குப் போய்விடுவோம். பரண்தான் எங்கள் அரசவை மற்றும் சதியாலோசனைக் கூடம்! இங்கேதான் மற்ற பயல்களின் சொத்துகளைக் கொள்ளயடித்தல், அவற்றை, குட்டு வெளிப்படாமல் மறைத்து வைத்தல், மற்றும் பங்கு போடுதல், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கல், எதிராளியை நேரடிப் போரில் வெல்லுதல், ஒற்று வேலை செய்தல், உறவாடிக் கெடுத்தல் முதலிய அதி முக்கிய, பயங்கர விசயங்கள் விவாதிக்கப்பட்டு, திட்டம் தீட்டப்படும்.. எங்கள் ஒவ்வொருவருக்கும், பிற கூட்டாளிகளுக்குத் தெரியாத ’பனாமா லாக்கர்கள்’ பரணில் இருந்தன. சாக்குப் பைகளின் அடி மடி, தட்டுமுட்டுச் சாமான்கள், உபயோகமற்றது என ‘தூக்கி’ வீசப்பட்ட சாமான்களின் இண்டு இடுக்குகள், கவிழ்த்து வைக்கப்பட்ட கூடைகளின் உட்புறம், பனிப்படலம் போல் மென்தூசிப் போர்வை மூடியிருக்கும், கொள்ளுத் தாத்தா / எள்ளுத் தாத்தாக்களின் பெட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். பிறருக்குத் தெரியாமல் இவற்றை திறக்க, பரண் மேல் ஏற ஒவ்வொருவருக்கும் பல         ’டெக்னீ’க்குகளும் உண்டு. கோலிக் குண்டுகள், பம்பரங்கள், தீப்பெட்டி அட்டைகள், சிகரெட் பெட்டி அட்டைகள்: என்ற நானாவிதமான ’அசையும்’ சொத்துக்கள் அரும்பாடு பட்டுச் சேமிக்கப்பட்டு, இந்த ’லாக்கர்’களில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால், எவ்வளவு இரகசியமாகச் சேமிககப்பட்டு வைத்தாலும், ஆட்டையை போடும் எத்தன்களும் எங்களில் உண்டு.
 பரணில் உட்கார்ந்து கொண்டு, ‘இன்னதென்றே தெரியாத’ பல கதைகள் பேசுவது சொர்க்கானுபவம். பரண் மேல் ஏற ஏணியெல்லாம் கிடையாது ஹால் கதவில் இரண்டடி இடைவெளியில் அமைந்திருக்கும் மூன்று உறுதியானக் குறுக்குச் சட்டங்கள்தான் ஏணி! இந்தச் ’சிக்கலான’ அமைப்பின் காரணமாக, பரணில் ஏறுவதற்கு பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை. மேலும் பரணில் இருக்கும் பேய், பிசாசுகள் பற்றியும் அவர்களுக்கு வாழையடி வாழையாக சொல்லப்பட்டிருந்தது. எனவே, பரண் முழுக்க பசங்கள் இராஜ்ஜியந்தான். பரணில் இருக்கும் சாமான்களை எடுக்க எங்களை விட்டால் வேறு ஆளுமில்லை. அந்த மாதிரி சமயங்களில் நாங்கள் அலட்டிக் கொள்ளும் அலட்டல்---அரசியல் வாதிகளெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்!
 சரோஜா அத்தை எதற்கும் துணிந்த கட்டை! தேவைப்படும் போது, அது தானே பரணில் ஏறி தனக்குத் வேண்டியதை எடுத்துக் கொள்ளும். அதை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அத்தையின் வாய் அவ்வளவு பிரசித்தம்!!
                                    ---தென்றல் இன்னும் முத்தமிடும்   

     

Friday, April 29, 2016

2.  நான் ஆசிவதிக்கப்பட்டவன்!
                                          ---லினிரா (30/04/2016)
 நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது,
 ஒரு நாளும் ஏரிக்கரையில் சிறுவர்களுடன் சுற்றியதில்லை!
 ஆற்று மணலில் கபடி ஆடியதில்லை!
 கிணற்று மேட்டில் கோலி, பம்பரம் விளையாடியதில்லை!
 மாந்தோப்பில் மாங்காய் திருடித் தின்றதில்லை!
 புளியமர நிழலில் பையன்களுடன் கட்டிப்பிடித்து உருண்டு    சண்டையிட்டதில்லை!
 ஆல மர விழுதுகளில் ”தூரி” ஆடியதில்லை!
 விழுதுகளைப் பிடித்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் வேதாளம் போல் தலைகீழாய்த் தொங்கியதுமில்லை!
 இருந்தாலும்,  
 நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்!
 என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களெல்லாம் தாத்தா, கொள்ளுப் பாட்டியுடன் கழிந்தன. அப்பா வழி தாத்தாவின் வீடு, கோவையில் இருந்தது. மரக்கடை மூலையில், நாவாப் ஹக்கீம் ரோட்டிற்கு எதிரில், மில் ரோடிலிருந்து வடக்கே பிரியும் சாலையான தியாகராயப் புது வீதி நெம்.1-ல், ஒரு சந்தில், அது இருந்தது. ஏறக்குறைய எட்டடி அகலமிருந்த அந்தச்சந்தின் இரு புறமும் “U” வடிவ நாட்டு ஓடுகள் வேய்ந்த வீடுகள் இருக்கும். ஓட்டு வீடுகள்தான். ஆனால் பிரம்மாண்டமனவை. தாத்தாவின் புழக்கடை- பின்புறம் இன்னொரு தெருவை தொடும். ஒன்றுக்கடுத்து ஒன்று என்று வரிசையாக இருந்த அவரின் பங்காளிகளின் வீடுகளும் அவ்வாறே! தாத்தாவின் தாத்தா தெரு முழுக்க ஓரே வீடாகக் கட்டி ஆண்டவர். 
 தாத்தா வீட்டு வரிசையில், எல்லா வீடுகளின் முன்புறமும் 3 அடி உயரத்தில், 1½ அடி அகலத்தில் திண்ணை இருக்கும். எதிர் வரிசையில் இவ்வாறு திண்ணை கிடையாது. திண்ணை அந்தஸ்தின் அடையாளம்! சற்றே உயரமான படிகளை ஏறி, ஆளோடியைக் கடந்து போனால், ஒரு பெரிய ஹால், அதையொட்டி, சதுர வடிவில் திறந்த முற்றம்; முழு நிலாக்காலங்களில் முற்றத்தில், நிலவும், மேகங்களும் ஓடிப் பிடித்து விளையாடும்: அமாவாசை நாட்களில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும்.  பெளர்ணமிக் காலங்களில் கொள்ளுப் பாட்டியின் எழும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் மடியில் படுத்துக் கொண்டு, ’ஜில்’ லென்று வீசும் தென்றலை சுவாசித்துக் கொண்டே மாயாஜாலக் கதைகள் கேட்பது…..அடடா, அது ஒரு தனி சுகம்! முற்றத்திற்கு ஒரு புறம் பெரிய ஹால், அதனுடைய நீட்சியாக ஒரு சிறிய சமையலறை, அதை ஒட்டி கூரையில்லாத குளியலறை. அந்தக் காலத்தில் ஆண்கள் கோமணத்துடனும், பெண்கள் பாவாடையை கழுத்துவரை மேலேற்றிக் கட்டிக் கொண்டும் குளிப்பதுதான் வழக்கம். பிற்காலத்தில் வந்து விட்ட கூரையிட்ட குளியலறைகளும், அவற்றில் ஆதாம், ஏவாள் திருக்கோலத்தில் குளிக்கும் பழக்கமெல்லாம் அப்போது இல்லை! எல்லாமே ஓட்டு வீடுகளாததால் பறவைப் பார்வைகளுக்கும் வழியில்லை! சொல்லப்போனால், அப்படி ஒரு சங்கதி இருப்பதே யாருக்கும் தெரியாது! (மக்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்!) தாத்தா. வீட்டின் தரை சின்னஞ்சிறு காரைக் கற்களும் ஒரு வித சாந்தும் கலந்த கலவையால் ஆனது. கொள்ளுப் பாட்டி அதைச் சாணியால் மெழுகி, மெழுகி, சலவைக்கல் போல் இழைத்திருந்தாள். தாத்தா, மனைவியை இழந்தவர். சமையலை கவனித்துக் கொண்டது ஐந்தாம் வகுப்பு படித்த, பதினெட்டு வயதான, திருமணத்திற்குக் காத்து கொண்டிருந்த சரோஜா அத்தை. அவருக்கு உதவி 93 (!) வயதான கொள்ளுப் பாட்டி.
 விடுமுறை நாட்களில், வெயிலில் ‘ஆடு ஆடெ’ன்று ஆடிவிட்டு வந்தால், அத்தை+கொ. பாட்டி சமையல் வாசனையில் அடி வயிறு ‘கப கப’ வென்று எரியும். கை, கால் கழுவிக் கொண்டு வந்து வரிசையாக உட்கார்ந்தால், பாட்டி முதலில் இராகிக் களியை சட்டியிலிருந்து சுடச்சுட எடுத்து உருட்டி வட்டிலில் போடும். சூடு தாங்காமல் பாட்டி ’ஊஊ’ என்று அவ்வப்போது ஊதும். அந்த மாதிரி சமயங்களில், சில சமயம், அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகும்; ஒழுகும் எச்சில் களி உருண்டையை ஆசிர்வதிப்பதும் உண்டு. ஒரு நாளும் நாங்கள் அதற்காக அருவருப்படைந்தது இல்லை: ’அருவருப்பு’ போன்ற அற்ப விஷயங்கள் தெரியாமல், அன்பு போன்ற அற்புத விஷயங்கள் மட்டுமே தெரிந்த வயது அது! பாட்டி உருண்டைகளை வட்டிலில் போட்டவுடன், அத்தை அதன் மேல் சுடச்சுட கத்திரிக்காய் அல்லது மொச்சைக் கொட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு குழம்பை ஊற்றும். களி உருண்டையை, விரலைச் சுட்டுக் கொண்டே அதைப் பற்றிக் கவலை படாமல், வாயில் வைத்து, சூடு தாங்காமல், ‘ச்சூ ச்சூ’ என்று மென் ஒலிகளை எழுப்பிக் கொண்டே சப்பு கொட்டிக் கொண்டே சாப்பிட்ட சுகத்தை இப்போது நினைத்தால்,“ மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மா நிலத்தே!” என்ற தேவார வரிகள்தான் மனதில் ஊஞ்சல் ஆடுகின்றன. 

                                        --தென்றல் இன்னும் முத்தமிடும்

Friday, April 22, 2016

தென்றல் தருணங்கள்

 1. இரண்டு ரூபாய் நோட்டு !
 ஊசிப்பட்டாசைத் தெருவில் வீசியெறிந்தால், பட்டென்று வெடித்துவிடும்! வெயில் அப்படிக் கொளுத்திக் கொண்டிருந்தது, கற்பின் கனல் போல்!.
 வேறு வழியின்றி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். எத்தனை நேரம்தான் புத்தகம் வாசிப்பது? மனைவிக்குத் தெரியாமல், தொலைக்காட்சி பார்ப்பது?
 திடீரென்று ஏதோ நினைப்பில், புத்தக அலமாரியைக் குடைய ஆரம்பித்தேன்.
 புத்தகங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்த ஏதோவொன்று ”மளுக்” கென்று மடியில் விழுந்தது! கண்கள் அதன் மேல் அனிச்சையாக மேய்ந்தன.
 அட! இரண்டு ரூபாய் நோட்டு!
 புதுக்கருக்கழியாத, புத்தம் புது சலவை நோட்டு!
 பாரக்கப் பார்க்க பரவசம், மல்லிகைச் சரத்தின் மணமாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டது-
 ரூபாய் நோட்டுகளில், இரண்டு ரூபாய் நோட்டுகள் மட்டும் தனியானவை.. இளம் ஆரஞ்சு மற்றும் வான் நீலம் என இரண்டு மிகை வேறுபாடு (contrast)  நிறங்களில் அவை அச்சிடப்பட்டிருக்கும். வேறெந்த நோட்டிலும் இந்த வண்ணக் கலவையைப் பார்க்க முடியாது---அவைகளெல்லாம் ஒரே வண்ணத்தின் பல “ஷேடு” களில் அச்சிடப்பட்டவை.
 பூமிப்பந்தின் மேல் செயற்கைக் கோளொன்று (ஆர்ய பட்டா ?) பறக்கும் படம் இரண்டு ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
 இந்த இரண்டு ரூபாய் நோட்டு எப்படி புத்தக அலமாரிக்குள் வந்தது?    
 எப்படி புத்தகங்களுக்கிடையில் மாட்டிக் கொண்டது?
 விடை தெரியாத வினாக்கள்!
 காதல் கனிந்தது எப்போது என்ற கேள்விக்கு யாராவது விடை சொல்ல முடியுமா, என்ன?
 இவ்வளவு காலத்திற்குப் பின்னும், நோட்டு, புதுக் கருக்கழியாமல் இருந்தது, வாழ்வின் சில தென்றல் தருணங்களைப் போல!
 தென்றல் தருணங்களெல்லாம் கடந்த காலத்துக்குச் சொந்தமானவை! நினவுச் சுழலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அவை, எப்போதாவது மேழும்பி வரும்! அப்போதெல்லாம் அவை நம்மைச் சத்தமின்றி முத்தமிட்டுச் செல்லத்தவறுவதே இல்லை! தென்றல் முத்தமிடும் அந்தத் தருணங்கள் மட்டும் இல்லையெறால்…







                                   
                          
                                ---தென்றல் இன்னும் முத்தமிடும்        ---லினிரா                     
26/04/2016