Saturday, May 28, 2016

தென்றல் 
     தருணங்கள்...                                                       
6. கம்பெனி அய்யா!
                                                      ---லினிரா ( 29/05/2016)
 தாத்தா வீடு இருந்த வரிசையில், தாத்தா வீட்டிற்கு இருபுறமும் தறிகள் இருந்தன. தாத்தா வீட்டில் மட்டும் தறிகள் ‘மிஸ்ஸிங்’. தாத்தாவின் அப்பா கைத்தறி நெசவாளராக இருந்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் அந்தக் காலத்திலேயே  நான்கு எழுத்து’ படித்து உத்தியோகம் பார்த்தவர்கள். என் தாத்தாவின் தம்பி- என் சிறிய தாத்தா ரெவின்யு இன்ஸ்பெக்டராக இருந்தவர்.
 தாத்தா அன்று கோவையின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான மருதாசலம் செட்டியாரிடம் வேலை பார்த்து வந்தார். செட்டியார் கொஞ்ச காலம் சென்னையில் சினிமாத் துறையில் தன் திறமையைக் காட்டி விட்டு, பின்பு சினிமாவும் இவரிடம் தன் வேலையைக் காட்டிவிட்டதால், கோவையில் செட்டிலானவர். இன்றும் கோவை மேட்டுப்பாளையம்  ரோட்டிலிருக்கும் ‘ஷண்முகா தியேட்டர் செட்டியாருக்குச் சொந்தமானதுதான். அந்தக் காலத்திலேயே இது இரண்டு தளங்கள் கொண்டதாகக் கட்டுபட்டது.  தரை மட்டத்திற்குக் கீழே இருக்கும் கீழ் தளத்தில் நாடகங்கள் நடக்கும்; மேல் தளத்தில் சினிமா! செட்டியாருக்கு இதைத் தவிர கோவை பெரிய கடை வீதியில் கர்னாடிக் தியேட்டர் முன்புறம் ஒரு பெட்ரோல் பங்கும், திருப்பூரில் ஒரு பெட்ரோல் பங்கும் இருந்தன. இரண்டும் ’பர்மா‘ஷெல்’ கம்பெனியின் விற்பனை நிறுவனங்கள். தாத்தா செட்டியாரின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்தார்.
 தாத்தாவின் பங்காளிகலெல்லாம் காலை ஆறு மணிக்கே கோவணத்துடன் தறியில் உட்கார, கையில் அப்போது கோவையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ‘நவ இந்தியா’ செய்தித்தாளுடன் இவர் திண்ணையில் தரிசனம் தந்தருள்வார். ஏழுமணி சுமாருக்கு, ஒரு வெண்தாடி வேந்தர்---(இவர் பார்பதற்கு வினொபா பவே போலவே இருப்பார்). தலையில் குடுமியுடனும், வெற்று மார்பில் போர்த்திய துண்டுடனும் இருக்கும் இவரைப் பார்தாலே பயல்கள் எங்களுக்கு வெகு இளக்காரம் வெ. வேந்தர், தாத்தாவிடம்,‘நேடிகி ஏமி நியூஸ்?’ என்று தெலுங்கில் கேட்பார். உடனே தாத்தா அவரிடம் பேப்பரைக் கொடுத்துவிட்டு, குளிக்கக் கிளம்பி விடுவார். ‘தினமும் இப்படி ஓசிப் பேப்பர் படிக்க வந்து விடுகிறாரே இவர்’, என்று எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். (அந்தக் காலத்தில் இப்படி ஓசியில் பேப்பர் படிக்கவென்றே ஒரு கூட்டம் அலைந்தது)
 தாத்தா குளித்துவிட்டு, எட்டு மணியளவில் தன் ‘கம்பெனி’க்கு கிளம்பி விடுவார். வீட்டிலிருந்து என்.ஹெச். ரோடு வழியாக, ஐந்து முக்கு வந்து, கிழக்கே திரும்பி., ‘பிரசென்டேஷன் கான்வென்ட் எதிரில் சாலையைக் கடந்து, தன் அலுவலகத்திற்குச் செல்வார். மதிய சாப்பாட்டிற்கு ஒரு மணிக்கு வந்தாரென்றால், இரண்டு மணியளவில் மீண்டும் அலுவலகம் செல்வார். மாலை ஆறுமணியளவில் வீடு திரும்புவார்.
 தாத்தாவின் மார்பின் குறுக்கே முப்புரி நூல் ( பூணூல்) தொங்கும் அதில் அவருடைய பரம்பரைச் சொத்தான, 5 அடி ஈட்டி பீரோவின் சாவி தொங்கும். தாத்தா துவைத்த, சுத்தமான வெள்ளாடைகளையே அணிவார். மேலே ஜிப்பா. இடுப்பில் நாலு முழ வேட்டி. இடது தோளில் மடிப்புக் கலையாத அங்க வஸ்திரம். வலது கையில் குடையுடன், சரக் சரக்கென்று செருப்பு ஒலி கட்டியம் கூற, அவர் அலுவலகம் செல்வதை சிறுவர்கள் நாங்கள் பிரமிப்புடன் பார்ப்போம். தாத்தாவிற்கு, செட்டியாரின் சகவாசத்தால் ஆங்கிலமும் ஒரளவிற்குத் தெரியும். பர்மாஷெல் கம்பெனி பெட்ரோல் பங்கில் அவர் வேலை செய்ததால், தாத்தாவை அவர் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் ‘கம்பெனி ஐயா’ என்றே அழைத்தார்கள். எங்களுக்கும் அவர் கம்பெனி ஐயாதான் – வளர்ந்து, நான் கல்லூரி செல்லும் போதுதான் அவரின் பெயர், வேலாசாமி செட்டியார் என்று எனக்குத் தெரியும். நெசாவாளியின் மகன் நெசவாளிதான் என்று இருந்த காலத்தில். என் கொள்ளுத் தாத்தா தன் இரண்டு மகன்களையும் நாலெழுத்து படிக்க வைத்து, அலுவலக வேலைக்கு அனுப்பினார். என் தாத்தா, தன் இரு மகன்களில் ஒருவரை (அடியேனின் தந்தை) உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இன்னொருவரை சிவில் இன்ஞீனியராகவும் ஆக்கினார். என் சித்தப்பா, பரம்பிக்குளம்--- ஆழியார் அணை கட்டியதில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். என் தந்தை என்னை பி.எஸ்சி, எம், ஏ என்று ஒரு சில ‘எழுத்துக்கள்’ படிக்க வைத்ததால். இதோ நானும் மடிக் கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

                                      ---தென்றல் முத்தங்கள் தொடரும்

Tuesday, May 24, 2016

5. மல்லிகை மங்கைகள்
                                            --லினிரா( 24/06/2016)
 தாத்தா வீட்டு சந்து, பெயருக்குத்தான் சந்து! இரண்டு அடிக்கு இரண்டடி சிமெண்டு கற்கள் பாவப்பட்டு, அது மிக சுத்தமாக இருக்கும். காலையும், மாலையும் அழகான கோலங்கள் அலங்கரிக்கும். தாத்தா வீட்டின் எதிர் வரிசையில், 3 அங்குல ஆழமும், 3 அங்குல அகலமும் கொண்ட சிறிய சாக்கடை நெடுக ஓடும். ஒரு இடத்தில்கூட சாக்கடை நீர் தேங்காது. தாத்தா வீட்டு வரிசையிலிருந்த வீடுகளுக்குச் சாக்கடை, புழக்கடைப் பக்கம் இருந்தது. தாத்தாவின் பங்காளிகள் அடுத்தடுத்துக் குடியிருந்தனர். தாத்தா வீட்டைத் தவிர மற்ற வீடுகளில்லெல்லாம் குறைந்த பட்சம் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தறிகள், ‘படுகு’ எனப்படும் நூள் சுற்றும் 10 அடி விட்டமுள்ள பெரும் இராட்டினம் ஒன்றும், 4 அடி விட்டமுள்ள இராட்டினம் ஒன்றும், 1 அடி விட்டமுள்ள இராட்டினம் இரண்டு, மூன்றும் இருக்கும். இவற்றில் சிறிய இராட்டினத்தை மட்டும் நெசவாளரின் மனைவி சுற்றுவார். மற்றவறைச் ‘சுற்ற’ கூலிக்கு பெண்கள் இருப்பார்கள். இப்படி ஒரே வீட்டில் நெசவாளி, தொழிலாளியாக இருக்க, அவர் மனைவி, இரண்டு, மூன்று பெண்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக இருக்கும் ஒருவிதக் ‘கலப்புப்’ பொருளாதாரம் அங்கு நிலவியது. காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நெசாவாளர்களின் வீட்டுத் தறிகளின் ’டக்கு, டடக்கு’ இன்னிசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாலை 5 மணி சுமாருக்கு, நெசவாளிகளின் மனைவிகள் தங்கள் வீட்டுக்காரருக்கு பனங்கருப்பட்டி ’தண்ணி’ கொடுத்துவிட்டு, தாங்களும் ஒரு வாய் குடித்துவிட்டு, தலைவாரிப் பொட்டிட்டு, பூச்சூடி தங்கள், தங்கள் வீட்டுத் திண்ணைகளில் அமர்வார்கள். சிறிது நேரத்தில், கல கல வென்ற சிரிப்புடன் அவர்கள் கச்சேரி களை கட்டும். தலைவாருதல் என்றால் சும்மா ஒப்புக்கு முடியை சீப்பால் ’வரக் வரகெ’ன்று வாரி கோடாலி முடிச்சுப்போடும் சாமாச்சாரமெல்லாம் இல்லை. நன்றாக சுத்தாமான(!) தேங்காய் எண்ணையை முடிக்குத் தடவி, சீப்பால் சிக்கெடுத்து (சிக்கெடுக்கும் அளவிற்கு பெண்களுக்கு அன்று முடியிருந்தது; சிக்கெடுக்க பெண்களுக்குப் பொறுமையும் இருந்தது ) நன்றாக அழுந்த வாரி சவுரி வைத்து மூன்று ‘கால்’ சடை பின்னிக் கொள்வார்கள். 40 + களில் இருக்கும் நாரிமணிகள், ‘பிச்சாடோ’ என்ற துணி வளையத்திற்குள் தங்கள் முடியைச் சுருட்டி ஒரு விதமான கொண்டையைப் போட்டு அதைச் சுற்றி மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொள்வார்கள். 60, 70-களில் வந்த திரைப்படத்தின் கதா நாயகிகளுக்கு இந்த ‘பிச்சாடோ’ கொண்டைதான் ‘ஸ்டாண்டாட்’ தலை அலங்காரம். நான் அப்படிப் பார்த்த முதல் கதா நாயகி, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தேவிகா! அந்தப் படத்தில் அந்தக் கொண்டையுடன் தேவிகா பாடும் ‘சொன்னதும் நீ தானா, சொல், சொல் என்னுயிரே’ வை இன்னும் என் நெஞ்சம் மறக்கவில்லை. ’குடிப்பது கஞ்சியே ஆனாலும், கட்டும் கந்தையைக் கசக்கிக் கட்டுவதும், நாள் தவறாமல் தலையில் மல்லிகைச் சரம் சூடுவதும்’ இப்பெண்களின் வாழ்க்கை நெறி! நெசவாளர்களின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போனாலும், வழிவழியாக வந்த, அவர்கள் பெண்கள் மாலையில் மல்லிகைப் பூ சூடிக்கொள்ளும் பழக்கம் மட்டும் இன்னும் மறையவே இல்லை. அன்று போல் இப்போதும் பல வீடுகளில் கடைகளுக்கு பூச்சரங்கள் கட்டிக் கொடுப்பது ஒரு குடிசைத் தொழிலாகவே இருக்கிறது. பூக்களையும், பூச்சரங்களையும் விற்பதற்காகவே இப்பகுதியில் ஒரு பெரிய மார்க்கெட்டே இயங்குகிறது. அதற்கு ‘பூ மார்கெட்’ என்றே பெயர். இப்படி தமிழ் நாட்டில் வேறெங்காவது இருக்கிறதா?
 இன்றைக்கும் தியாகராயப் புது வீதி 1, 2, 3, தேவாங்கர் பேட்டை, பூ மார்க்கெட் ஏரியாக்களில் மாலை நீங்கள் உலா வந்தீர்களென்றால் மல்லிகை மணக்கும் மங்கையரைப் பார்க்கலாம். ஆனால், இப்போது வடக்கும் தெற்கும் கலந்து விட்டதால், இந்தப் பகுதியில் குஜராத்திக் குடும்பங்கள் பெருகிவிட்டன. வீயாபாரம் செய்ய வந்த சேட்டுகள், பல நெசவாளர்களின் வீடுகளை, வாங்கி, அவற்றை இடித்து விட்டு, பெரும் கோட்டைகளைக் கட்டிவிட்டனர். நெசவாளர்களின் தறிகளும், திண்ணைகளும், கோவணங்களும் காணாமல் போய்விட்டன. , குஜராத்திப் பெண்களுக்கு, மல்லிகைப் பூச்சரங்கள் சூடிக்கொள்வதிலும் அவ்வளவாக விருப்பமில்லை போலும்! இன்று இந்தப் பகுதிகளில் நடந்து போனால், நெடு நெடு வென வளர்ந்த, நல்ல சிவப்பான, தலைக்கு பிறைச் சந்திர முக்காடிட்ட, வெடு வெடுவென வேகமாக நடந்து போகும் சேட்டுப் பெண்களைப் பார்க்கலாம். சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் அவர்கள் வேக, வேகமாக நடப்பது கண்கொள்ளாக் காட்சி! எனக்கொரு சந்தேகம்: இந்தப் பெண்கள் ’விசுக் விசுக்’ கென்று எவ்வளவு வேகமாக நடந்தாலும் இவர்கள் தலை மேல் போட்டிருக்கும் மூன்றாம் பிறை முக்காடு கொஞ்சம் கூட விலகுவதில்லையே, அது எப்படி?   
                                       ---தென்றல் இன்னும் முத்தமிடும்