Tuesday, August 17, 2021

 

கடவுளும் காரிகையும்

கோயில் வாசல்:
காரிலிருந்து இறங்கினாள்
காரிகை!
காலணி வைக்க மறைவான
இடம் தேடினாள்!
ஆய்ந்து, ஆய்ந்து,
ஆங்கோர் மூலையில்
அதை வைத்தாள்!
கயல் விழிகளை சுழலவிட்டாள்,
சுற்றும் முற்றும்!
"
கடவுளே!
யாரும் பார்க்கவில்லை
என் காலணிகளை!
நேற்றுதான் வாங்கினேன்!
ஆயிரம் ரூபாய்!"
கடவுளுக்கு சேதி பறந்தது!
காலணி காப்போனை
அவள் பார்த்தாள் அச்சமுடன்:
"
திருடிக் கொள்வானோ?"
கள்ளம் கொள் காரிகைக்கு
காலணியைக் காக்க,
காசுகொடுக்க மனமில்லை!
                        ***
கருவறையில் கடவுள்!
எதிரே பக்தை-பக்திப் பிழம்பு!
உதடுகளில் கடவுள் ஜபம்
உள்ளத்தில் காலணி தவம்!
பூசை முடிந்து திரும்பினால்
காலணியைக் காணோம்!
கண்களில் எரிந்தது கோபம்!
நவீன கண்ணகி
நீதி கேட்டாள் கடவுளிடம்:
"
எங்கே என் காற்செருப்பு?"
பயந்து போனான் பகவான்!
"
எரித்து விடுவாளோ?"
எம் பெருமான் நடுங்கினான்!
"
அம்மா! உங்கள் காலணி இங்கே!"
அசிரீரி ஒலித்தது!
கைகளில் காரிகையின்
காலணியுடன் அழைத்தவன்,
காலணி காப்போன்!
சீறி வரும் சிங்கமென
அவனை நோக்கி நடந்தவள்,
அவன் கரங்களிலிருந்த
காலணியைப் பறித்தாள்;
காசை நீட்டீனாள்!
காலணி காப்போன்
தன் தலைக்கு மேல்
அசைந்தாடிய அட்டையை
விழிகளால் சுட்டினான்:
"
இலவச காலணி காப்பகம்!"
காசால் கல்லாகிப் போன
காரிகை கர்வத்துடன்
கடந்து போனாள் அவனை!
கடவுளுக்கு போன மூச்சு
திரும்பி வந்தது!
        
---லினிரா  17/08.21

 

Friday, August 6, 2021

 

கிழித்து….

“கிழித்துவிடவா?” என்றேன்,

“கிழித்துவிடேன்!” என்றது:

“எரித்துவிடவா?” என்றேன்,

“எரித்துவிடு!” என்றது!

“குப்பைத் தொட்டியில்

வீசிவிடவா?” என்றேன்,

“பார்த்துப்போடு மக்கும் குப்பைத் தொட்டியில்!

மாட்டிக்கொள்ளப் போகிறாய் என்றது!”

”எதற்கு இப்படி” என்றது அது!

“வாரிசுகள் சலித்துக்கொண்டால்..…”

“இதற்கா இப்படிக் கவலை?

என்னையும் நண்பர்களையும்

எடைக்குப் போட்டுவிடு!

வரும் பணத்தில்

வாரிசுகளுக்கு பங்கு!”

சொல்லிவிட்டு,

படபடப்புடன் தன்னை மூடிக் கொண்டது

என் மடியிலிருந்த புத்தகம்!

    ---லினிரா 

Sunday, July 18, 2021

 

வெளி நாட்டில் வாழும்
பிள்ளைகளைப் பெற்ற
(அ) பாக்கியவான்களுக்கு
சமர்ப்பணம்!

வெளி நாட்டில்
வாழும் பிள்ளைகளும்
பேரக் குழந்தைகளும்
விமானத்தில்
வந்திறங்கும் போது
வெகு சுகமாய்த்தானிருக்கும்
பேரக் குழந்தைகள்
ஓடி வந்து கட்டிப்பிடித்து
சொர்க்கத்தைக் காட்டும்!
அவர்கள் இருக்கும்
அத்தனை நாட்களும்
இன்பம் இதயத்தில்
அரியாசனம் போட்டு
அமர்ந்து கொள்ளும்!
ஊர் சுற்றல்,
உணவு விடுதிகள்,
உடைகள் வாங்குதல்,
உறவினர் இல்லம் செல்லல்,
உறங்கு முன் நடு நிசி வரை
கதைகள் சொல்லலென
நிகழும்,
சுகங்களின் சங்கமம்!
வெளி நாட்டு நயத்தகு
நனி நாகரீகத்தால்
அடக்கி வைக்கப்பட்டிருந்த
ஆதிப்பிறவியின் சேட்டைகள்
அத்தனையும் அரங்கேறும்
தாத்தா,பாட்டி வீடுகளில்!
தெருவில் விளையாடும்
பேரக் குழந்தைகள்
திடீரென வீட்டுக்குள் நுழைந்து தரும்,
அரைத் தூக்கத்திலிருக்கும் தாத்தாவிற்கு ஓர் முத்தம்!
அப்படியே சமையலறை ஓடி
அங்கே வடை சுடும்
பாட்டிக்குத் தரும்
இடுப்பில் ஒரு சுட்டிக் கிள்ளு!
அப்போதெல்லாம்
உள்ளத்தில் ஊறும் உற்சாகம்
சாமிக்கே சவால் விடும்:
"இப்படியொரு இன்பம்
கண்டதுண்டோ நீ?"
குழந்தைகள் இருக்கும்
காலம் முழுவதும்
வீட்டிற்கு வசந்த காலம்!
கடவுளர் அறைக்கு மட்டும்
கார் காலம்!
காலச்சக்கரம் சுழல,
காட்சிகள் மாறும்!
''-வில் ஆரம்பித்தது
'அஃகு'-வில் முடியும்
அந்தக் காலையும் புலரும்!
சேகரித்த பொருட்களை
பெற்றோர்கள்
பெட்டிகளில் அடைக்க,
பேரக் குழந்தைகள்
துக்கத்தை
  மனதில் அடக்கி,
தாத்தா, பாட்டியை
சுற்றிச்சுற்றி வரும் காட்சி...
கூரற்ற வாளென
இதயம் அறுக்கும்!
விமான நிலையம் செல்ல
வாசலில் வண்டி வந்து நிற்க,
அரங்கேறும்
ஆசிர்வாதப் படலம்!
காலில் விழுந்த குழந்தைகள்
கட்டிப் பிடித்து கொண்டு,
"தாத்தா, பாட்டி
பத்திரமாய் இருங்க!"
   என்று தேம்புகையில்,
கண்களில் குளம் கட்டும்
கண்ணீர்!
மறு நாள்,
குழந்தைகள் கைகள் பட்டு
கலைந்த விட்ட பொருட்களை
சரி செய்கையில்,
மனதைக் கொல்லும்
மலையளவு துயரம்!
வாயைத் திறந்து
ஏதாவது பேசினால்,
மனைவி உடைந்து போவாள்
என்று கணவனும்,
இவன் உடைந்து போவான்
என்று அவளும்
மெளனம் காக்க,
வீடெங்கும் நிறைந்திருக்கும்
குழந்தைகளின்
  நறுமணம்;
கூடவே வெறுமையும்!
இப்போதும்,
காலச்சக்கரம் சுழல்கிறது,
மிக...மிக...மெதுவாக!
     ---லினிரா 19/07/21 

ReplyForward

 

 

Friday, July 16, 2021

 

கட்டெறும்பும், நானும்!

படுக்கப் போனேன்!
கட்டிலுக்கருகில்
கட்டெறும்பு ஒன்று!
உயிர்ப்பயம் உந்த,
அறிவு ஆணை இட்டது:
"
உடனே நசுக்கு!"
மனம் மன்றாடியது:
"
உன்னைப் போல்
அதுவும் ஓர் ஜீவன்!
உலகில் உயிர் வாழ
உனக்குள்ள உரிமை
அதற்கில்லையா?"
மனதின் இடி தாங்காது,
கட்டெறும்புக்குக்
கொடுத்தேன் கடவுச்சீட்டு!
நடு நிசி!
விழித்துக் கொண்டேன்!
அறிவுப் பேய்
தலைவிரித்தாடி
என் தூக்கம் குடித்தது:
"
முட்டாள்! உறக்கத்தில்
கட்டெறும்பு கடித்தால்..."
       -
ப.ராம்கோபால்10/07/21 

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/no_photo.png

ReplyForward

 

 

 

காரும், கால்களும்!

காரிலிருந்து
இறங்கிய சீமாட்டி
சாலையோர
செருப்புத் தைப்பவனிடம்
சென்றாள்!
ஐந்து ரூபாய் கேட்டவனிடம்
இரண்டு ரூபாய்
பேரம் பேசி
செருப்பை சீர் செய்து கொண்டு
இறுமாப்புடன் நடந்து போனாள்!
அவள் கொடுத்ததோ
இரண்டு ஓற்றை நாணயங்கள்!
அதிலொன்று கருங்கருப்பு!
அவள் சென்ற பின்,
நான் அவனிடம் சென்றேன்,
என் செருப்பை சீர் செய்ய!
பத்து ரூபாய் கேட்டவனிடம்
"கொஞ்சம் குறைத்துக் கொள்!"
எனக் கூச்சத்துடன் கேட்டேன்!
"முடியாது!" எனச் சொல்லி
முறைத்தவனிடம்,
காலணியைக் கொடுத்தேன், காணும் வழி வேறின்றி!
தையலுக்கோ நான்கு தையல்!
எனக்கோ
  இரண்டுதான்!
என்னிடம் இருப்பது
கால்கள்தானே!
காரல்லவே!
      -ப. ராம்கோபால் 17/07/21 

ReplyForward

 

 

Saturday, June 26, 2021

 

      அப்பாவுக்கு அஞ்சலி!

அம்மா என்றால் அன்பு!
அப்பா என்றால் அக்கறை!
அம்மா என்றால் பாசம்!
அப்பா என்றால் பரிவு!
அம்மா என்றால் அரவணைப்பு!
அப்பா என்றால் கண்டிப்பு!
அம்மாவுக்கு நாம் பஞ்சாரக் கோழி!
அப்பாவுக்கு நாம் வானம்பாடி!
அம்மா நமக்கு சோறு ஊட்டுகிறாள்!
அப்பா நம் வாழ்க்கைக்கு சாரம் ஏற்றுகிறார்!
அம்மா வீட்டில் உழல,
அப்பா உலகில் உழல்கிறார் நமக்காக!
அம்மா நம்மை கைபிடித்து
அழைத்துச் சென்றாள் பள்ளிக்கு!
அப்பா நம் கரம்கோர்த்து
அழைத்துச் சென்றார் வாழ்க்கைப் பள்ளிக்குள்!
அம்மா தன் தேவைகளை
அவ்வப்போது நம்மிடம் சொல்வாள்!
அப்பா நம் தேவையே
தன் சேவையேன வாழ்வார் எப்போதும்!
அம்மா கேட்பாள் ஆயிரம்!
அப்பா கேட்பதில்லை எதையும்!
அம்மா ஓர் கவிதை!
அப்பா ஓர் காப்பியம்!
கவிதை புரியும்!
காப்பியம் புரிவதில்லை,
முழுமையாக, என்றும்!
அம்மாவின் பாசமெல்லாம்
அன்பு மனைவி வரும் வரையே!
மனைவியென ஒருத்தி வந்து விட்டால்,
தினம் தினம் குருஷேத்திரம்!
"'இருதலைக் கொள்ளி எறும்பு'
இதுதான்!" புரியும் அப்போது!
அப்பாவின் அக்கறையோ,
குந்து மணியும் குன்றாது,
குவலயம் அவர்
  நீங்கும் வரை!
அவ்வப்போது,
அப்பா மடி மீது முகம் புதைத்து
அழுதிருக்க ஆசைதான்!
ஆனால்...
        --லினிரா, 20/06/21 

 

 

 

 

  

Friday, June 25, 2021

 

கவியரசருக்கு ஒர் கடிதம்! 

                
சிறுகூடல்பட்டி தந்த சிங்காரக் கண்ணா!

சிந்தையள்ளும் தமிழில் சத்தான

பாடல் பல படைத்த கவிக்கோமானே!

பதின் பருவத்தில், உன் பாடல்களைப்

பாடித் திரிந்தோம்,பொருள் புரியாமலே!

பின்னாட்களில், வாழ்க்கை வாத்தியார்

பாடமெடுக்க உன் வரிகளின் 

பொருளும் புரிந்தது!

வாழ்க்கையின் புதிர்களும் விளங்கின!                 

கவியரசே!

நீ பட்ட காயங்களெல்லாம்,

உனக்குக் கவிதை வரிகளாயின!

அந்த வரிகளெல்லாம்

மருந்தாயின எங்கள் காயங்களுக்கு!

உன் பாடல்கள்,

நாங்கள் அடிபட்டு, அழுத போதெல்லாம்

தாயின் முந்தானையாக மாறி,

வீழும் கண்ணீர்த் துளிகள் துடைத்தன!

காதலில் தவித்த போது

தடவிக் கொடுத்தன முதுகை!

காதலில் திளைத்த போது

காவியப் பெண்களின்

இல்லா இடைகளாய் மாறி

இன்னிசையயோடு அசைந்தாடின!

வாழ்க்கைப் பயணத்தில்

உற்றாரும், உறவினரும்,

சமயத்தில் நண்பர்களும்,

காலை இடறிவிட,

"மனைவியின் தோள் பற்றி நட!

மலையளவு துயரமும்

மறைந்து போகும் மேகத்தை போல!' "என்றாய் நீ!

வாழ்க்கைக் காட்டில் நாங்கள்

வழி தெரியாமல் திகைத்த போது,

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்!

காட்சி கிடைத்தால் கவலை தீரும்!”

என்ற வாழ வழி

சொல்லித் தந்த செம்மல் நீ!              

எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி

எட்டாக் கனியாயிற்று உனக்கு!

ஆனாலும் என்ன,

கம்பனும்,புகழேந்தியும்,வள்ளுவனும்,வள்ளலாரும், 

சங்கப் புலவர்கள் பலரும், பட்டினத்தடிகளும்,

தவமிருந்தனர் உன் வீட்டு வாசலில்,

தங்கள் சொல்லாட்சி

உன் ஆட்சியாக வேண்டுமே

என்ற கவலையில்!   

கம்பன் கண்டதோ ஓரிரு வண்ணம்!

நீ கண்டதோ ’பால் வண்ணம்’ முதல் பல வண்ணம்!         

ஓர் சுவை தான் தேனுக்கு உண்டென்று நாங்கள் அறிவோம்!

ஆனால், பல் சுவைத் தேனை பருகத் தந்தவன் நீ!

கவிஞர் பலரும் பெண்ணை பல விதமாய் வருணிக்க

நீயோ பெண்ணையே ’கலை ’யாகக் கண்டாய்!

’சந்தித்த வேளையில் சிந்திக்காமல் கொடுப்பதுதான் காதல்!”

என்று காதலுக்கு உரை எழுதியவன் நீ!

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!”

என்று தாம்பத்தியத்திற்கு இலக்கணம் வகுத்தவன் நீ!

’முதிரா கதிரையும்’ ’முளைக்காத சொல்லையும்’

உவமைகளாக்கி எங்களுக்கு

உன்மத்தம் பிடிக்கச் செய்தாய்!

தமிழ் இலக்கணத்தையும் இலக்கியத்தையும்,

உன் வரிகள் போல

ஆரே சொல்லித்தர வல்லார்?

உன் பாடல்களால்

பாமரர்களில் வாயிலும் கமழ்ந்தது தமிழ்;

புகுந்து புறப்பட்டன வாழ்வியல் தத்துவங்கள்!

"ஆண்டவன் எங்கே?" என்று

ஆளாய்  நாங்கள் பறந்த போது,

"அனுபவமே ஆண்டவன்!"

என்ற அரும் பெரும்

தத்துவம் சொன்னவன் நீ

"இறைவா!

எனக்கொரு வரம் தா!

இன்னும் பல பிறவிகள்

நானெடுக்க வேண்டும்

ஒவ்வொன்றிலும்

தமிழனாய் பிறக்க வேண்டும்,

கவியரசின் கவியமுதை

அள்ளி அள்ளி பருக வேண்டும்!"

                -லினிரா 26/06/21 

ReplyForward