Thursday, June 10, 2021

 

மின்னல், மழை, மோகினி!

ஒளியற்ற மின்னல்,

ஓசையற்ற இடி,

சிறு துளிகளாய் பெருமழை!

விழுந்த துளிகளெல்லாம்

நீரற்ற நதியில் நீந்தி,

ஓர் பந்தினை துளைக்க

முட்டி மோதின!

பந்தினுள் இருந்த மோகினி

கதவை திறந்து

ஓர் துளியை உள்ளேவிட

மற்ற துளிகளெல்லாம்

மடிந்து போயின ஏக்கத்தில்!

ஊள்ளே நடந்தது

ஆனந்தத் தாண்டவம்!

ஐயிரண்டு திங்களில்

வையகம் காணும்

ஆண்டவன் திருக்கோலம்!

                         -லினிரா

 

கண் முன்னே கடவுள்...

கண் முன்னே
கடவுள் தோன்றினான்!
"என்ன வரம் வேண்டும்?"
என்று கேட்டான்!
"இதயத்தை அன்பால் நிரப்பு!
என்றேன் நான்!
"நன்றாக யோசித்து கொள்!"
என்றான்!
"யோசிக்க ஏதுமில்லை!
முடியுமா, முடியாதா!"
என்று கடிந்து கொண்டேன் நான்!
"அப்படியே ஆகட்டும்!" என்று சொல்லி மறைந்து போனான்
ஆண்டவன்!
பாத்திரம் அறிந்து
பிச்சை இடும் வித்தை
தெரியாததால்
பட்டுவிட்டேன பல துயரம்!
காயங்களுக்கு மருந்திட
கடவுளைத் தேடுகிறேன்;
கண்டால் குறுஞ்செய்தி அனுப்புங்கள்!
    

                          ---லினிரா