Tuesday, August 17, 2021

 

கடவுளும் காரிகையும்

கோயில் வாசல்:
காரிலிருந்து இறங்கினாள்
காரிகை!
காலணி வைக்க மறைவான
இடம் தேடினாள்!
ஆய்ந்து, ஆய்ந்து,
ஆங்கோர் மூலையில்
அதை வைத்தாள்!
கயல் விழிகளை சுழலவிட்டாள்,
சுற்றும் முற்றும்!
"
கடவுளே!
யாரும் பார்க்கவில்லை
என் காலணிகளை!
நேற்றுதான் வாங்கினேன்!
ஆயிரம் ரூபாய்!"
கடவுளுக்கு சேதி பறந்தது!
காலணி காப்போனை
அவள் பார்த்தாள் அச்சமுடன்:
"
திருடிக் கொள்வானோ?"
கள்ளம் கொள் காரிகைக்கு
காலணியைக் காக்க,
காசுகொடுக்க மனமில்லை!
                        ***
கருவறையில் கடவுள்!
எதிரே பக்தை-பக்திப் பிழம்பு!
உதடுகளில் கடவுள் ஜபம்
உள்ளத்தில் காலணி தவம்!
பூசை முடிந்து திரும்பினால்
காலணியைக் காணோம்!
கண்களில் எரிந்தது கோபம்!
நவீன கண்ணகி
நீதி கேட்டாள் கடவுளிடம்:
"
எங்கே என் காற்செருப்பு?"
பயந்து போனான் பகவான்!
"
எரித்து விடுவாளோ?"
எம் பெருமான் நடுங்கினான்!
"
அம்மா! உங்கள் காலணி இங்கே!"
அசிரீரி ஒலித்தது!
கைகளில் காரிகையின்
காலணியுடன் அழைத்தவன்,
காலணி காப்போன்!
சீறி வரும் சிங்கமென
அவனை நோக்கி நடந்தவள்,
அவன் கரங்களிலிருந்த
காலணியைப் பறித்தாள்;
காசை நீட்டீனாள்!
காலணி காப்போன்
தன் தலைக்கு மேல்
அசைந்தாடிய அட்டையை
விழிகளால் சுட்டினான்:
"
இலவச காலணி காப்பகம்!"
காசால் கல்லாகிப் போன
காரிகை கர்வத்துடன்
கடந்து போனாள் அவனை!
கடவுளுக்கு போன மூச்சு
திரும்பி வந்தது!
        
---லினிரா  17/08.21